Thursday 6 April 2023

எல்லாச் சாலைகளும் தப்படிச்சான் மூலையை நோக்கி - சிவக்குமார் முத்தய்யாவின் குரவை நாவலை முன்வைத்து

நேரடியான களத் தரவுகள் ஒரு நாவலின் வெற்றியில் எவ்வளவு தூரம் பங்கு வகிக்க முடியும் என்ற கேள்வியுடன் குரவை நாவலை அணுகுவது சரியாக இருக்கும். தமிழில் இதற்கு முன்பு நேரடியான கள ஆய்வுகள் அல்லது தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சில நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. ராஜம் கிருஷ்ணனின் பெரும்பாலான ஆக்கங்கள் இந்த வகைமையில் வரக்கூடியவை. ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி ,சதீஷ் வாசுதேவனின் கத்தலே, இரா.முத்துநாகுவின் சுளுந்தீ போன்ற ஆக்கங்கள் தரவுகளை மையமாகக் கொண்டு தமிழில் இதற்கு முன்பு வெளியான ஆக்கங்கள். இத்தகைய படைப்புகளால் சமூகத்தில் உடனடியாக ஒரு பேச்சினை உருவாக்க முடிகிறது என்பது உண்மைதான். விளிம்பு நிலை மக்களின் பாடுகள் பேசுபொருளாகும்போது அக்குரலுக்கு சமூகம் செவிசாய்க்க வேண்டிய ஒரு அறரீதியான கட்டாயத்தை இப்படைப்புகள் உருவாக்குகின்றன. அதில் தவறென்று கொள்ள ஏதுமில்லை. ஆனால் ஒரு படைப்பு சமகாலத்தின் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை மட்டும் பதிவு செய்தால் போதுமா? இத்தகைய படைப்புகளை அந்த அநீதி இழைக்கப்பட்ட மக்கள் என்னவாகப்‌ பார்க்கின்றனர்? என்ற வகையிலான கேள்விகளை எழுப்பிக் கொண்டு இப்படைப்புகளை அணுகுவது ஒரு எல்லை. மறு எல்லையில் கலாப்பூர்வமாக இவற்றின் பெறுமதி என்னவென்றும் பார்க்க வேண்டியிருக்கிறது.


புனைவெழுத்து , புனைவு வாசிப்பு என்ற இரண்டுமே ஞாபகம் என்கிற விஷயத்தை நம்பி இருப்பதாக நான் கருதுகிறேன். சமகாலத்தின் மீது நமக்கு அக்கறை இருப்பதாகவும் சமகாலத்தின் அநீதிகள் ஒவ்வொன்றும் நம்மை வந்து பாதிப்பதாகவும் நாம் கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் நம்முடைய உண்மையான அக்கறை நம் நினைவில் எது தங்கி இருக்கிறது என்பதைப் பொறுத்தது மட்டுமே. வீட்டு வாசலில் செருப்பை கழட்டிய பிறகு அதோடு கழன்று விழாத ஞாபகங்களாக எவையெல்லாம் நீடிக்கின்றனவோ அது சார்ந்து மட்டுமே உண்மையில் நாம் அக்கறை கொள்கிறோம். தரவுகள் சார்ந்து நிற்கக்கூடிய படைப்புகளின் பலவீனம் அத்தகைய ஆழமான ஞாபகங்களை வாசகனிடம் உருவாக்க முடியாமல் போவதுதான். கையில் தரவுகள் இருக்கும் உற்சாகத்தில் ஒரு பலவீனமான கற்பனைச் சரடில் அத்தகைய தரவுகளைக் கோர்த்து புனைவு வெளியை கட்டமைக்க முடிகிறது. ஆனால் அது வாசகனில் எந்தவொரு நிரந்தர விளைவையும் உருவாக்க முடியாது. இலக்கிய வடிவங்கள், படைப்பின் வெளிப்பாட்டு உத்தி, யதார்த்தவாதம்,கற்பனாவாதம் போன்ற பேச்சுகள் எல்லாம் படைப்பு வாசகனில் ஏதாவது உணர்ச்சியை உருவாக்குகிறதா என்று பார்ப்பதற்காகவே. எழுத்தாளர் தான் உணர்ந்ததை எளிய இரக்கவுணர்ச்சி சார்ந்து அல்லாமல் அனுபவங்கள் தனக்குக் கொடுத்த அதிர்ச்சி, தொந்தரவு அல்லது தொந்தரவின்மை போன்றவை சார்ந்து விவரித்துச் செல்லும்போது ஒரு படைப்பின் அர்த்த உலகத்திற்குள் வாசகரால் எளிதாகப் புழங்க முடிகிறது. நாவல் வடிவத்தைப் பொறுத்தவரை எழுத்தாளர் உருவாக்கும் அர்த்த உலகம் மிகுந்த வலிமை வாய்ந்ததாக பிரத்யேகமானதாக இருக்க வேண்டும். தரவுகள் சார்ந்து உருவாகும் படைப்புகள் இந்த நாவலின் புறவுலகத்தை வலுவாக கட்டமைத்துவிடுகின்றன. ஆனால் வாசிப்பு நிலையில் அப்படைப்பு உருவாக்கும் அர்த்த உலகம் என்ன என்று பார்க்கும்போது பல படைப்புகள் ஏமாற்றம் தருகிறவையாகவே உள்ளன. சிவகுமார் முத்தய்யாவின் குரவை நாவல் வலுவான அர்த்த உலகத்தை கட்டமைத்திருப்பது அதன் முதன்மையான கலப்பூர்வமான வெற்றி என்று சொல்ல வேண்டும்.







சிவகுமார் முத்தய்யா கீழ்தஞ்சை மாவட்டத்தின் விவசாயப் பின்புலம் கொண்டு இயங்கும் மக்களின் பாடுகளை தொடர்ச்சியாக எழுதிவரும் படைப்பாளி. ஆனால் குரவை நாவல் விவசாயக் குடிகள் பற்றியதல்ல. கலைஞர்கள் பற்றியது. குரவையாட்டம் ஆடுகிறவர்கள், குறவன் குறத்தி வேடங்கட்டி ஆடுகிறவர்கள், தவில் கலைஞர்கள், பறையிசைப்பவர்கள், நாதஸ்வர வித்வான்கள், பறை தயாரிப்பவர்கள் என கீழ் தஞ்சை நிலம் வேறொரு பின்னணியில் இருந்து இந்நாவலில் அணுகப்படுகிறது. நாவலின் காலம் இன்றிலிருந்து கால் நுற்றாண்டுக்கு முன்பு. உலகமயமாக்கலும் நவீன கல்வியும் உருவாக்கி இருக்கும் அபரிமிதமான வளர்ச்சியின் ரேகைகள் மெல்லியதாகத் தென்படத் தொடங்கும் காலத்தை நாவல் தொட்டுக் காட்டுகிறது. மழையின்மை, பெரிய புயல்கள், நீர்வரத்து குறைந்து போவது போன்ற நாட்களைத் தவிர பிற நாட்களில் விவசாயக் குடிகளின் வாழ்க்கை ஏறத்தாழ 'ஒரே' தன்மையைத்தான் கொண்டிருக்கும். திருவிழாக்களும் விவசாயச் சமூகங்களின் பிரிக்க முடியாத அம்சமாக இருக்கிறது. தை மாதத்தின் அறுவடை முடிந்து அடுத்த விதைப்பு நடைபெறும் ஆனி,ஆடி மாதங்கள் வரை விவசாய வேலைகள் சற்று குறைந்த காலம். ஏறத்தாழ எல்லாப் பெருந்திருவிழாக்களும் இக்காலத்திலேயே நடைபெறும். இந்தத் திருவிழாக்களில் பங்கு பெறும் கலைஞர்களின் வாழ்க்கை வழியாக மொத்த கீழ்தஞ்சைப் பகுதியின் பண்பாட்டையும் சிவகுமார் முத்தய்யா இந்த நாவலில் காட்ட முயன்றிருக்கிறார். அம்முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.


தப்படிச்சான் மூலை தஞ்சையில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் வசிக்கும் ஒரு பகுதியாக நாவலில் சொல்லப்படுகிறது. இன்னுமே கூட தஞ்சையின் கீழவாசல் பகுதியில் இவர்களைக் காணலாம். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள ஆப்பரக்குடி நாட்டுப்புற கலைஞர்கள் வசிக்கும் ஒரு ஊர். கலியமூர்த்தி, நித்யா,பேபி,நாகராசன்,முத்துப்பட்டன், முருகேசன், குமரேசன்,வசந்தா என எண்ணற்ற நாட்டுப்புறக் கலைஞர்களின் கதைகள் நாவலில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் இடம்பெறுகின்றன. அவர்களுடைய வாழ்க்கை சொல்லப்படும் விதத்தினைக் கொண்டும் சிவகுமார் முத்தய்யா இந்நாவலுக்கு எழுதி இருக்கும் முன்னுரையை வைத்தும் நாவல் பெரும்பாலும் நேரடித் தரவுகள் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது. அத்தரவுகளை சிவகுமார் முத்தய்யா அலுப்பான மொழிநடையில் நாவல் முழுக்க தூவிவிட்டுச் செல்லாமல் தரவுகளைக் கொண்டு எதைப் பேச வேண்டுமோ அதை மிகச் சரியாகவே பேசி இருக்கிறார்.


ஸ்திரமான வருமானமும் நிலையான உறவுகளும் அற்ற வாழ்க்கை அமைந்தவர்களாக இந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் இருக்கின்றனர். கலைக்கு மனிதனை பீடிக்கும் தன்மை உண்டு. ஆட்டக்காரிகளாக வரும் பெண்கள் ஆடுவதால் சந்திக்கும் இன்னல்களைத் தாண்டி ஆடுவதின் வழியாக உருவாகும் பெருமிதத்திற்காவும் நிறைவுக்காகவுமே அந்த வாழ்க்கையில் தொடர்ந்து நீடிக்கின்றனர். மரியாதையற்ற வாழ்க்கையில் இருந்து அடுத்த தலைமுறையாவது தப்பிப்போக வைத்துவிடும் எண்ணமே அவர்களுடைய வாழ்க்கையை உந்துகிறது. பேபி தன் மகள் ரேகாவை ஆட்டக்கலையில் இருந்து தப்புவிக்க நினைக்கிறாள். கலியமூர்த்தி தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து தப்பி தன் குழந்தைகள் மனைவியுடன் வாழவே முயல்கிறான். ஆனால்  'குடும்ப வாழ்க்கை' ஒரு கனவாகவே உள்ளது. குமரேசன் போல திட்டவட்டமாக சுயநலத்துடன் குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்கள் நீங்கலாக மற்ற அனைவரும் நிலையற்றே அலைகின்றனர். சரியாக அமைந்த குடும்பத்தை தன் சந்தேகத்தால் சீர்குலைத்துவிட்டு சாகும்வரை அதற்கென வேதனைப்படும் நாகராசன் போன்றவர்களும் இந்நாவலில் இடம்பெறுகின்றனர். வறுமையான வாழ்க்கையின் காரணமாக ஆட்டக்காரியாகும் சாந்தி,சித்ரா போன்ற பெண்களும் பேசப்படுகின்றனர். பபூன் வேஷம் போடும் குள்ளன் ஆல்பர்ட்டுக்கு பெண் பார்க்கச் செல்லும் இடம் நாவலில் முக்கியமான ஒன்று. ஆட்டக்காரிகளை காமத்துடன் அணுகுகிறவர்கள், எந்நேரமும் அவர்கள் எதிர் கொள்ள நேரிடும் பாலியல் தொல்லைகள்,குடும்பத்தைக் கெடுப்பவர்கள் என்று குடும்பப் பெண்களிடமிருந்து அவர்கள் பெறும் வசை எல்லாமும் மிகுந்த அக்கறையுடன் நாவலில் பேசப்படுகிறது. 





காமம் சார்ந்த விவரிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அத்தகைய இடங்களை சிவகுமார் முத்தய்யா கோடிட்டு மட்டுமே காட்டுகிறார். காமத்தைக் கடந்து அவ்வுறகளால் ஏற்படும் அன்றாடப் பாடுகளையும் சிக்கல்களையும் பேசுவதிலேயே சிவகுமார் முத்தய்யா அக்கறை கொள்கிறார். உதாரணமாக கலியமூர்த்தி வசந்தாவிற்கு இடையேயான உறவைச் சொல்லலாம். பேரழகியான வசந்தாவை திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரம் ஒன்றிலிருந்து கலியமூர்த்தி காப்பாற்றுகிறான். கலியமூர்த்தி தவில் கலைஞன். இருவருக்கும் இடையேயான உறவு வளர்கிறது. ஆனால் வசந்தா அவனை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாள். (வசந்தா மட்டுமின்றி ஆடும் பெண்கள் பலரிடமும் திருமணத்துக்கு எதிரான இந்த மனநிலையைக் கொண்டுள்ளனர். அவர்கள் அப்படி எண்ண காரணம் தங்களுடைய சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்வதா அல்லது 'பத்தினி' உருவகத்தினால் ஏற்படும் அழுத்தமா என்பது நாவலில் சொல்லப்படுவதில்லை.) கலியமூர்த்திக்கு மணமாகிறது. கலியமூர்த்தியின் முந்தைய வாழ்க்கை அவன் மனைவி பாப்பாவுக்குத் தெரிகிறது. அந்தப் பழைய உறவினை அறுத்தும்விடாமல் வளரவும் விடாமல் பாப்பா தன் குடும்பத்தை நடத்திச் செல்கிறாள். வசந்தாவின் வாழ்க்கை வேறு விதமாக நகர்கிறது. அவளுடைய ஆட்டத்தைப் பார்க்க வந்த சண்முகம் குடும்பத்தை விட்டு அவளுடனேயே தங்கி விடுகிறார். அவருடைய கடைசி காலத்தில் வசந்தாவே அவருக்கு எல்லாப் பணிவிடைகளும் செய்கிறாள். அதற்கு கலியமூர்த்தியும் உதவுகிறான்! அப்படி அவள் உதவி கேட்டு வரும் சித்திரம் நாவலில் இடம்பெறுகிறது. கலியமூர்த்தி தன் மனைவியிடம் வசந்தாவை உதவி கேட்கும்படிச் சொல்கிறான்.


/ கலியமூர்த்தி தவிலால் தட்டி டும்...டும்.. என அடித்து ஓசையெழுப்பி கேட்கச் சொல்லி சமிக்ஞை செய்தான். தவில் வாசிப்பவர்களுக்தும் ஆடுபவர்களுக்குமான ரகசிய மொழி அது. வாசிப்பவர்கள் தங்களுக்கு சோர்வு ஏற்படும் போது குறைவான சத்தத்தை எழுப்பினால் ஆடுபவர்கள் அதைப் புரிந்து கொண்டு கூட்டத்தில் இருந்து எவ்வளவு விசில் சத்தம் வந்தாலும் வேகமெடுத்து ஆடமாட்டார்கள். அதுபோல ஆடுபவர்கள் ஆடமுடியாது கால் வலிக்கும்போது காலில் அணிந்திருக்கும் சலங்கையை தரையில் வைத்து இரண்டு முறை குலுக்கினால் அடியின் வேகத்தை குறைப்பது தொடங்கி சாப்பிடுவது,சம்பளம் அதிகம் கேட்பது வரை பல சங்கதிகள் அதில் உண்டு/


இது மாதிரியான பல நுண்ணிய தருணங்களை நாவலில் குறிப்பிட முடியும். திடீரெனக் கிடைக்கும் புகழ், புகழ்வெறியில் எடுக்கும் தவறான முடிவுகள் எப்படியெல்லாம் இக்கலைஞர்களின் வாழ்க்கையை அலைகழிக்கின்றன என்பதைத் தாண்டி சொல்லப்படாத கோணமாக சமூகம் இவர்களைப் போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களை என்னவாகப் பார்க்கிறது என்பதும் வாசிப்பின் வழி உணரத்தக்கதாக உள்ளது. தவில் கலைஞர்களுக்கு இடையேயான ஆசிரியர் மாணவர் உறவு, போட்டியில் நடைபெறும் கொலைகள், அப்பாவின் தொழிலான பறையிசையை கைக்கொள்ளும் செவத்தகன்னி என்று முடிவற்றது என்று தோன்றும் பாத்திரங்களும் கோணங்களும் நாவலில் வெளிப்பட்டபடியே இருக்கின்றன.


பல இடங்களில் நாவலில் பாத்திரங்களின் பெயர்களே தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சந்திரன் என்று வரவேண்டிய இடத்தில் குமரேசனின் பெயர் வருகிறது. இதுபோன்ற குறைகளை அடுத்தடுத்த பதிப்புகளில் கவனமாகக் களைவது நாவல் வாசிப்பு அனுபவத்தை மேலும் நிறைவானதாக மாற்றும். மயில் ராவணனின் கொலையும் அதைச் சந்திரன் 'துப்பறிந்து' தப்படிச்சான் மூலைக்குச் செல்வதும் நம்பகத் தன்மையுடன் சொல்லப்பட்டிருந்தாலும் நாவலின் பொதுவான உணர்வு நிலையில் ஒட்டாமல் தனித்து நிற்கிறது.


முன்பின்னாக நகர்ந்து பல்வேறு கலைஞர்கள் வழியாக நகரும் நாவலின் உணர்வுத்தளத்தில் ஒரு அமைதி நிலவுகிறது. எங்குமே போலியான சீற்றமோ கோபமோ வெளிப்படுவதில்லை. மிகையான காமமோ வன்முறையோ நாவலில் இல்லை. முன்பின்னாக நகர்ந்து பாத்திரங்களின் போக்கு காண்பிக்கப்படுவதாலேயே  எங்குமே செயற்கையான அதிர்ச்சிகளும் திருப்பங்களும் இல்லை. சந்திரன்,செவத்தகன்னி, மயில் ராவணன் என்று தஞ்சையின் வேறு வேறு ஊர்களில் வாழ்கிறவர்கள்கூட ஏதோவொரு வகையில் தப்படிச்சான் மூலையுடன் தொடர்புடையவர்களாக மாறுகிறார்கள். தொடர்ச்சியான வாழ்க்கைச் சித்தரிப்புகள் வழியாக சிவகுமார் முத்தய்யா தப்படிச்சான் மூலையை ஒரு பெரிய தொன்ம நிலமாக மாற்றிக் காட்டி விடுகிறார்! ஆனால் அங்கு மாயங்களோ தெய்வங்களோ பிசாசுகளோ இல்லை. முழுக்க முழுக்க கலைஞர்களும் அவர்களின் உற்சாகமும் சுதந்திரமும் வலியும் நிறைந்த வாழ்க்கைப்பாடுகளே உள்ளன. இப்படி ஒரு தனித்துவம் மிகுந்த வாழ்க்கைச் சூழல் ஒரு நாவலில் உருவாகி வருவது அபூர்வமான ஒன்று. அந்த வகையில் தப்படிச்சான் மூலை தமிழ் நாவல் பரப்பு பேசியிருக்கும் முக்கியமான களங்களில் ஒன்று.


-சுரேஷ் பிரதீப்.


சிவகுமார் முத்தய்யா தமிழ் விக்கி


https://tamil.wiki/wiki/File:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE.png













Saturday 11 March 2023

புதுமைப்பித்தன் எனும் அறிவன் - காணொளி


புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்து எழுபத்தைந்து நிமிடங்கள் இடைவிடாமல் பேசி இருக்கிறேன். என் உரைகளில் இதுவே நீண்டது. ஆனால் திரும்ப கேட்டுப் பார்க்கும்போது எந்தவிதமான நீட்டி முழக்குதல்களும் இல்லாமல் நவீன இலக்கியம் எந்த மொழியை எனக்குக் கொடுத்திருக்கிறதோ அதே மொழியில் ‌செறிவாகத்தான் பேசி இருக்கிறேன் என்று தோன்றுகிறது. இந்த உரையை வழக்கமான பேச்சாளர்கள் போல இழுத்து நீட்டினால் நான்கு மணிநேரம்வரும். ஆகவே உரையை சற்று கவனமுடன் கேட்கும்படி நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். ஏறத்தாழ இருபது நாட்கள் புதுமைப்பித்தன் குறித்தும் அவர் படைப்புகள் குறித்தும் வாசித்துக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருந்திருக்கிறேன். இன்று இவ்வுரையை பதிவு செய்து முடித்தவுடன் ஒரு கடினமான தேர்வை எழுதி முடித்த விடுதலை உணர்வும் வெறுமையும் மனதை நிரப்புகின்றன. இவ்வுரையின் பெரும்பகுதியை ஏற்கனவே கட்டுரையாக எழுதிவிட்டேன்.‌ புதுமைப்பித்தனின் பிற்கால கதைகள் பற்றி மட்டும் எழுத நேரமில்லாததால் குறிப்புகளாக எடுத்து வைத்திருக்கிறேன்.‌ விரைவில் அவற்றையும் விரிவாக்கி எழுதி முழுக் கட்டுரையைப் பகிர்கிறேன். ஒரு மேதையை முழுதாக வாசிக்கும்போது அவருடைய உணர்ச்சிகளிலும் மேதைமையிலும் தோய்ந்திருக்கும் போது தகப்பன் தோளேறிய குழந்தைபோல அவரைவிட சில செண்டிமீட்டர்கள் கூடுதலாக சிலவற்றை தரிசித்து விடுகிறோம்.‌ அவ்வாறாக நானடைந்த சில புரிதல்களை இந்தக் காணொளியில் பகிர்ந்து கொண்டுள்ளேன். இக்காணொளி பரவலான கவனத்தைப் பெற வேண்டும் என்றும் புதுமைப்பித்தன் பற்றிய வாசிப்பு இன்னும் விரிவடைய வேண்டும் என்றும் விரும்புகிறேன். நண்பர்கள் இவ்வுரை குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டால்- உரையை பகிர்ந்து கொண்டாலும் - மகிழ்வேன். உரையின் சுட்டி முதல் கீழே


https://youtu.be/-Fxkz6W9Ex8


#tamilliterarytalks

Sunday 19 February 2023

இலக்கிய முன்னோடிகள் என்னும் 'தேறாத கேஸ்கள்'



அழிசி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் 'சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்', 'புதுமையும் பித்தமும் (ஆளுமை-படைப்பு-விவாதம்)' என்ற இரு நூல்களும் நவீனத் தமிழ் இலக்கிய வரலாறு, இலக்கிய விமர்சனம் என்ற இரு வகையிலும் முக்கியமான நூல்கள். இவ்விரு நூல்களின் ஆசிரியரும் க.நா.சுப்ரமண்யம்தான் என்றாலும் இந்த நூல்கள் க.நா.சுவால் வெளியிடப்படவில்லை. சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் நூலில் எழுத்து இதழில் 1959ஆம் ஆண்டும் அதைத் தொடர்ந்த சில ஆண்டுகளிலும் தமிழின் சிறந்த சிறுகதைகளை தொகுப்பது என்றால் தன்னுடைய எதிர்பார்ப்பு எத்தகையதாக இருக்கும் என்று க.நா.சு எழுதிய கட்டுரைகளும் அதற்கான எதிர்வினைகளும் க.நா.சுவால் முன்வைக்கப்பட்ட எட்டு சிறுகதைகளும்(மௌனி, புதுமைப்பித்தன்,கு.ப.ராஜகோபாலன்,ந.பிச்சமூர்த்தி ஆகியோரின் தலா இரண்டு சிறுகதைகள்) தொகுக்கப்பட்டிருக்கின்றன. புதுமையும் பித்தமும் என்ற நூலில் க.நா.சுவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் நடந்த விவாதங்கள்,க.நா.சு புதுமைப்பித்தன் பற்றி எழுதிய சில கட்டுரைகள் (புதுமையும் பித்தமும் என்ற மிக முக்கியமான கட்டுரை உட்பட) மற்றும் ஒரு கவிதை ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன.( இவ்விரு நூல்களையும் முறையே பாலன் , பாலு என்ற இருவர் தொகுத்திருக்கின்றனர். இவ்விரு மர்ம நபர்களும் நண்பர் ஶ்ரீனிவாச கோபாலனின் புனைப்பெயர்கள் என்று கொள்வதில் தவறில்லை என நினைக்கிறேன்!) .


இலக்கிய விமர்சன மரபு வலுவிழந்திருக்கும் இன்றைய சூழலில் சங்கடமான விமர்சனங்களை மௌனமாக கடந்து செல்லும் 'நாகரிகம்(!?)' வலுப்பெற்றிருக்கும் இக்காலத்தில் க.நா.சுவின் இந்தக் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப்படுகின்றன. க.நா.சு எந்த அளவுகோலின் அடிப்படையில் படைப்புகளை ஏற்கிறார் அல்லது நிராகரிக்கிறார் என்பது இக்கட்டுரைகளில் வெளிப்படவில்லைதான். ஆனால் அவருடைய கதை சார்ந்த 'நுண்ணுணர்வு' அவரைப் பெரும்பாலும் கைவிடவில்லை. இன்று யோசித்துப் பார்க்கும்போது நாம் நவீன இலக்கியத்தின் முன்னோடிகள் என்று உருவகிக்கும் வரிசை ஏறத்தாழ க.நா.சு என்ற ஒற்றை மனிதராலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லிவிடலாம். மணிக்கொடி காலம் தொடங்கி தொடர்ச்சியாக இலக்கியச் சூழலை அவதானித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அவர் தமிழில் வாசிக்கவும் எழுதவும் தொடங்குவது பதின்பருவம் கடந்தபிறகுதான். அதற்கு முன்னதாகவே ஐரோப்பிய இலக்கியத்தில் க.நா.சுவுக்கு ஆழமான பரிச்சயம் இருந்திருக்கிறது. அன்றைய சூழலில் 'கதைகள்' என்று முன்வைக்கப்பட்ட பெரும்பாலான எழுத்துக்களின் சாரமின்மையை மிகச் சரியாக எடுத்துக் காட்டுகிறார். அவ்வளவு கறாரான அளவுகோல் கொண்டிருப்பதாலேயே க‌.நா.சுவால் 1959வரை எழுதப்பட்ட ஒட்டுமொத்த சிறுகதைகளிலேயே ஒரு பதினைந்து கதைதான் 'தேறும்' என்று சொல்ல முடிகிறது. புதுமைப்பித்தன் எழுதிய எல்லாமும் பொக்கிஷம் என்று சொல்லப்படும் இந்தக் காலத்தில் கூட  புதுமைப்பித்தன் பற்றி க.நா.சுவின் 1959ஆம் வருட மதிப்பீடான 'பூரணம் பெறாத தனித்துவம்' என்பது பொருத்தமானதாக அமைகிறது (பின்னாட்களில் இந்நிலைப்பாட்டை க.நா.சுவே மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை!) என்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை.





இலக்கிய 'மோஸ்தர்' என்பதற்கும் க.நா.சு எதிரானவராகவே இருந்திருக்கிறார். கல்கி போன்றோரை வெறும் 'பத்திரிக்கை கதைக்காரர்கள்' என்று நிராகரிக்கும் க.நா.சு மணிக்கொடி ஆசிரியர்களில் ஒருவரான பி.எஸ்.ராமையாவையும் நிராகரிக்கவே செய்கிறார். மணிக்கொடியில் எழுதப்படுவதெல்லாம் பொன்னாக இருக்க வேண்டும் என்ற முன்முடிவு எதுவும் க.நா.சுவிடம் இல்லை.‌ சிறந்த தமிழ்ச் சிறுகதைகளுக்கான க‌.நா.சுவின் எதிர்பார்ப்பு பெரும்பாலும் வடிவம் சார்ந்ததாகவே இருக்கிறது. சிறுகதையின் வடிவம் சார்ந்த தெளிவான புரிதல் உருவாகி இருக்காது காலத்தில் க.நா‌.சு மீண்டும் மீண்டும் கதைக்கும் சிறுகதைக்குமான வேறுபாட்டைச் சொல்லி சிறுகதையின் வடிவ இலக்கணங்களுக்குள் பொருந்திப் போகும் கதைகளையும் சிறுகதையின் வடிவ சாத்தியங்களைத் தாண்டிச் செல்லும் கதைகளையுமே சிறந்த கதைகள் என்று வரையறுக்கிறார். புதுமைப்பித்தன் கதைகளின் மீதான க.நா.சுவின் அங்கலாய்ப்பு இந்த வடிவம் சார்ந்ததாகவே இருக்கிறது. புதுமைப்பித்தன் இக்கதைகளை இன்னும் மேம்படுத்தி இருக்கலாமே என்றுதான் அக்கறைப்படுகிறார். புதுமைப்பித்தன் தன் கதைகளை திரும்ப வாசிப்பதே கிடையாது என்பதை பலமுறை இந்நூல்களில் சொல்லி இருக்கிறார்.





புதுமையும் பித்தமும் நூலில் தீவிரமான விமர்சன உளப்பாங்கு கொண்ட சமகால எழுத்தாளர்கள் இருவருக்கு இடையேயான உறவின் நெருக்கத்தையும் விலகலையும் காண்கிறோம். மணிக்கொடியில் சிற்பியின் நகரம் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தனை க.நா.சு சந்திக்கச் செல்கிறார். முதல் சந்திப்பிலேயே 'இதுவும் நம்மைப்போலத் தேறாத கேஸ்' என்று சிரித்துக் கொண்டே புதுமைப்பித்தன் க.நா.சுவை நெருங்கிவிடுக. 'புதுமைப்பித்தன் என்ற ஒரு மேதை' என்கிற கட்டுரையில் க.நா.சு இப்படி எழுதுகிறார். 


/திருவனந்தபுரத்திலிருந்து நண்பர் ரகுநாதன் - சொ.வியின் கடைசி நாட்களில் அவருடன் கூட இருந்து உதவியவர் அவர்தான் - 'மருந்துச் செலவுக்கும் கூட சிரமப்படுகிறது. பண உதவி தேவை' என்று எனக்கு ஒரு கார்டு எழுதி,அதை அடித்திவிட்டு 'இன்று புதுமைப்பித்தன் காலமானார்' என்று 1948ல் எனக்கு எழுதினார்/


தன்னுடைய சக 'தேறாக கேஸ்' தன்னை விட்டு சீக்கிரம் போய்விட்டதான கவலையும் தான் நீண்ட நாட்கள் வாழ்வது குறித்த சலிப்பும் க.நா.சுவிடம் வெளிப்படுகிறது. இந்த கவலைக்கும் சலிப்புக்கும் அடியில் புறக்கணிப்பு மிகுந்த தமிழ்ச்சூழல் மீதான கசப்பும் வெளிப்படுகிறது. 'புதுமையும் பித்தமும்' ஐந்திணை பதிப்பகத்தின் வாயிலாக வெளியான புதுமைப்பித்தன் சிறுகதைகள் (இதுவொரு முழுத் தொகுப்புக்கான முயற்சி) நூலுக்கு க.நா.சு 1987ல் எழுதிய கட்டுரை. வேகம் குறைந்து சமநிலை கூடியிருக்கும் மொழியில் புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றி மட்டும் பேசிச் செல்லாமல் அவருடன் தான் பகிர்ந்து கொண்ட ஏராளமான நினைவுகளை இக்கட்டுரையில் சுவாரஸ்யமாக க.நா.சு விவரிக்கிறார். தன்னுடைய சொற்ப ஆயுள்காலத்தில் ஏறத்தாழ பதினைந்து வருடங்கள் புதுமைப்பித்தன் இலக்கியத்திற்கு பங்காற்றியிருக்கிறார். க.நா.சு இந்த பதினைந்து ஆண்டுகளில் பத்தாண்டுகள் புதுமைப்பித்தனின் நண்பராக இருந்திருக்கிறார். வெறும் பதினைந்து ஆண்டுகளில் புதுமைப்பித்தனின் அக்கறையற்ற விரிந்திருந்த எல்லைகளைப் பார்த்தால் மலைப்பு ஏற்படுகிறது. ஒரு‌ அக்மார்க் 'தேறாத கேஸ்' மட்டுமே இப்படி வெறிகொண்டு செயல்பட்டிருக்க மேடியும். க.நா.சு புதுமைப்பித்தனை சந்திக்கும்போது இருவருமே முப்பது தொடாத இளைஞர்கள்.(புதுமைப்பித்தன் க.நா.சுவுக்கு மூத்தவர்).  சுந்தர ராமசாமி தோட்டியின் மகனை மொழிபெயர்த்தபோது இருபது வயது.‌எம்.வி.வெங்கட்ராம் எழுதத் தொடங்கியபோது பதினாறு வயது என்கிறார்கள். ராஜமய்யர்,கு.ப.ரா,பாரதி எல்லோருமே சொற்ப வயதில் இறந்தவர்கள். இன்றைய ஆயுள் கால நீட்சியை ஒப்பிட்டால் ஐம்பத்து மூன்று வயதில் மறைந்த அ.மாதவையாவும் சொற்ப வயதில்தான் மறைந்திருக்கிறார். இந்த நூலில் என்னை அதிகம் தொந்தரவு செய்த விஷயம் முன்னோடிகளின் இந்த வயதுதான். இன்றைய சூழல் ஒரு வகையில் சோர்வளிப்பதாக உள்ளது. ரொம்ப நாள் உயிரோடு இருப்போம் என்கிற சொகுசு ஒட்டுமொத்த இலக்கிய உலகத்தையும் மந்தத்தன்மை கொண்டதாக மாற்றிவிட்டதாக தோன்றுகிறது.


க.நா.சுவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் நடந்த விவாதங்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு கதையை 'தழுவி' எழுதுவது அவ்வளவு தவறாக எடுத்துக் கொள்ளப்படாத காலத்தில் க.நா.சுவும் புதுமைப்பித்தனும் தழுவல் குறித்து கொண்டிருந்த பார்வைகள் பல விஷயங்களை புரிய வைக்கின்றன. க.நா.சு போரும் அமைதியும் படித்த உற்சாகத்தில் ஏறத்தாழ இலக்கிய தூய்மைவாதியின் உன்மத்தத்துடன் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதற்கு மறுப்பாக

'இந்தக் கோபம் இலக்கிய சேவையா?' என்று புதுமைப்பித்தன் எழுதி இருக்கும் கட்டுரை மிக மிக முக்கியமானது. அதீதமான 'இலக்கியப்பற்று' சமூகத்தை ஒரு கலைஞன் அவதானிப்பதில் நிதானக்கேட்டினை ஏற்படுத்துவதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டி இருக்கிறார். எப்போது நிதானமாக இருக்கும் க.நா.சு போரும் அமைதியும் கட்டுரையில் உணர்ச்சிவசப்படுவதும் உணர்ச்சிவசத்துடனேயே எழுதும் புதுமைப்பித்தன் நிதானமாக அக்கட்டுரைக்கு மறுப்பு எழுதி இருப்பதும் சுவாரஸ்யமான முரண்கள்!


இவ்விரு நூல்களும் இலக்கிய வரலாற்று நோக்கில் எழுதப்படவில்லை. ஆனால் அன்றைய சூழல் குறித்த ஒரு தெளிவினை அளித்துவிடுகின்றன. மேலும் சமகால இலக்கியவாதிகள் (வாசகர் எழுத்தாளர் இருவருமே) கற்பதற்கு இந்த விவாதங்களில் நிறைய இருப்பதாகவும் தோன்றுகிறது. ஒரு நல்ல 'தேறாத கேஸாக' மாற இந்நூல் வாசகரை ஊக்குவிக்கும் என்பது இதன் சிறப்பு!



Wednesday 18 January 2023

அரைக்கிணறு

15.01.2023 பதிவேற்றிய நிழலின் தனிமை நாவல் குறித்த அறிமுகக் காணொளியுடன் 'முப்பது நாட்கள் முப்பது நூல்கள்' வரிசையில் பதினைந்து காணொளிகள் நிறைவடைந்திருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது இரண்டு மூன்று காணொளிகளாக பதிவு செய்து வைக்கும்படி நண்பர்கள் பலர் கூறியிருந்தனர். நேரம் கிடைக்கவில்லை என்பதுதானே முக்கியமான பிரச்சினை! Tamil literary talks சேனல் தொடங்கியபோது நூல் அறிமுகங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் இந்தக் காணொளிகளால் உந்தப்பட்டு எனக்குத் தெரிந்தே பன்னிரண்டு நண்பர்கள் நான் அறிமுகம் செய்திருக்கும் நூல்களை வாசிக்கத் தொடங்கியுள்ளனர். கருணாகரத் தொண்டைமான்,ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிமும் மாதிரியான ஆய்வு நூல்கள் குறித்தெல்லாம் விசாரிக்கின்றனர். உள்ளபடியே இந்த நூல் அறிமுகங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. ஒருசில நூல்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் முன்பு எப்போதோ வாசித்து நினைவிலிருந்து மீள்கிற நூல்களாக இருக்கின்றன. இருநூறு பக்கங்களுக்கு குறைவான நூல்கள் என முன்னரே அறிவித்துவிட்டேன். ஒரேயொரு பிரச்சினை இருநூறு பக்கங்களுக்கு குறைவான நூல்களை நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன் என்பதுதான்! கவிதைத் தொகுப்புகளை ஐந்திலிருந்து ஏழு நிமிடங்களுக்குள் அறிமுகம் செய்வது அவற்றுக்கு நியாயம் செய்வதாக இருக்காது என்ற எண்ணத்தினாலேயே கவிதைத் தொகுப்புகளை இதுவரை தவிர்த்து வந்திருக்கிறேன். இனிவரும் காணொளிகளில் முயன்று பார்க்க வேண்டும். குறைந்தது கவிதைகள் குறித்த நூல்களையாவது அறிமுகம் செய்ய வேண்டும். எது எப்படி இருப்பினும் இந்தச் செயல் மிகுந்த நிறைவளிப்பதாக உள்ளது. அதேநேரம் சேனல் தொடங்கிய நோக்கம் இதுவல்லவே என்ற எண்ணமும் ஏற்படுகிறது. இன்னும் பதினைந்து நாட்களில் இந்த காணொளி வரிசை நிறைவுற்றதும் மீண்டும் தமிழ்ச் சிறுகதைகள் குறித்த காணொளிகளை புதுமைப்பித்தனிலிருந்து தொடருவேன். இதுவரை அறிமுகம் செய்த காணொளிகளின் சுட்டிகளை கீழே கொடுத்திருக்கிறேன்.


1.நாரத ராமாயணம் - புதுமைப்பித்தன்


https://youtu.be/XsgWcwJJTwM


2.கருணாகரத் தொண்டைமான் - குடவாயில் பாலசுப்ரமணியன்


https://youtu.be/1iJwKE5mPhQ


3.கடுகு வாங்கி வந்தவள் - பி.வி.பாரதி(தமிழில் - கே.நல்லதம்பி)


https://youtu.be/nMk15fIOPbc


4.காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக்(தமிழில் - கே.நல்லதம்பி)


https://youtu.be/znbZ1Drp1Kc


5.பால்யகால சகி - வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில் - குளச்சல் மு.யூசுப்)


https://youtu.be/sXby1mjVYLs


6.எம்ஜிஆர் கொலைவழக்கு - ஷோபாசக்தி


https://youtu.be/wlVnlEZ0H08


7.மணல் - அசோகமித்திரன்


https://youtu.be/RC8VUcZmWio


8.மிக்காபெரிசம் - சிவானந்தம் நீலகண்டன்


https://youtu.be/XJkRSRah14Y


9.சடங்கில் கரைந்த கலைகள் - அ.கா.பெருமாள்


https://youtu.be/9X8ewEcx030


10.விருந்து - கே.என்.செந்தில்


https://youtu.be/8n4DkvvKuLQ


11.விசும்பு - ஜெயமோகன்


https://youtu.be/XNbAROe6JNg


12.வீடியோ மாரியம்மன் - இமையம்


https://youtu.be/67B0AdtcbN4


13.ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிமும் - ராஜ் கௌதமன்


https://youtu.be/IuaLi7Funfw


14.நானும் ஒருவன் - சுரேஷ்குமார இந்திரஜித்


https://youtu.be/Ajup9vggcFU


15.நிழலின் தனிமை - தேவிபாரதி


https://youtu.be/ZE_2OyOjyZs

Friday 30 December 2022

2022ல் வாசித்த நூல்கள்

1.உச்சவழு - ஜெயமோகன்

2.வெண்கடல் - ஜெயமோகன்

3.குமரித்துறைவி - ஜெயமோகன்

4.பிரதமன் - ஜெயமோகன்

5.ஆனையில்லா - ஜெயமோகன்

6.ஐந்து நெருப்பு - ஜெயமோகன்

7.உண்மைகள் பொய்கள் கற்பனைகள் - அரிசங்கர்

8.பத்து லட்சம் காலடிகள் - ஜெயமோகன்

9.எழுகதிர் - ஜெயமோகன்

10.தங்கப்புத்தகம் - ஜெயமோகன்

11.ஆயிரம் ஊற்றுகள் - ஜெயமோகன்

12.முதுநாவல் - ஜெயமோகன்

13.தேவி - ஜெயமோகன்

14.வான்நெசவு - ஜெயமோகன்

15.மலை பூத்தபோது - ஜெயமோகன்

16.பொலிவதும் கலைவதும் - ஜெயமோகன்

17.இரு கலைஞர்கள் - ஜெயமோகன்

18.வாடிவாசல் - சி.சு.செல்லப்பா

19.ஷோஷா - ஐசக் பாஷவிஸ் சிங்கர்(தமிழில் - கோ.கமலக்கண்ணன்)

20.துயில் - எஸ்.ராமகிருஷ்ணன்

21.மண்டியிடுங்கள் தந்தையே - எஸ்.ராமகிருஷ்ணன்

22.நான் கண்ட மகாத்மா - தி.சு‌.அவினாசிலிங்கம்

23. வயலட் ஜன்னல் - உமா மகேஸ்வரி

24.எண்கோண மனிதன் - யுவன் சந்திரசேகர்

25.இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை - டி.தருமராஜ்

26. வேங்கைச்சவாரி - விவேக் ஷன்பேக் மொழிபெயர்ப்பு சிறுகதைகள்) 

27.மிளகு - இரா.முருகன்

28.வ.உ.சியும் காந்தியும் -ஆ.இரா.வெங்கடாசலபதி

29.ஜின்னாவின் டைரி - கீரனூர் ஜாகிர்ராஜா

30.தலைப்பில்லாதவை - யுவன் சந்திரசேகர்

31.வானம் முழுவதும் - ராஜேந்திர யாதவ் (தமிழில் - மு.ஞானம்)

32.டிப் டிப் டிப் - ஆனந்த்குமார்

33.சுந்தர ராமசாமி தேர்ந்தெடுத்த கட்டுரைகள் - தொகுப்பு - ச.தில்லைநாயகம்

34.ராஜன் மகள் - பா.வெங்கடேசன்

35.கடலில் எறிந்தவை - யுவன் சந்திரசேகர்

36.துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை - பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்

37.கையறு - கோ.புண்ணியவான்

38.பஷீரிஸ்ட் - கீரனூர் ஜாகிர்ராஜா

39.தீர்த்த யாத்திரை - எம்.கோபாலகிருஷ்ணன்

40.மனநோயின் மொழி - டேவிட் கூப்பர் - (மொழிபெயர்ப்பு - லதா ராமகிருஷ்ணன்)

41.விருந்து - கே.என்.செந்தில்

42.The Glass Palace - Amitav Ghosh

43.யதி: தத்துவத்தில் கனிதல்

44.நித்ய கன்னி - தகழி சிவசங்கரப்பிள்ளை (மொழிபெயர்ப்பு - யூமா வாசுகி)

45.வடக்கேமுறி அலிமா - கீரனூர் ஜாகிர்ராஜா

46.கானுறை வேங்கை - கே.உல்லாஸ் கரந்த் (மொழிபெயர்ப்பு - சு.தியோடர் பாஸ்கரன்)

47.வெயில் பறந்தது - மதார் (மறுவாசிப்பு)

48.மத்தி - ச.துரை (மறுவாசிப்பு)

49.நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன் - இசை(மறு வாசிப்பு)

50.ப்ராளம்ஸ்கி விடுதி - டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் (தமிழில் - லதா அருணாச்சலம்)

51.தேய்பிறை இரவுகளின் கதைகள் - கீரனூர் ஜாகிர்ராஜா

52.அந்தியில் திகழ்வது - வே.நி.சூர்யா

53.தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - கே.கே பிள்ளை

54.ஃப்ரான்ஸிஸ் இட்டிக்கோரா - ட்டி‌.டி.ராமகிருஷ்ணன் (தமிழில் - குறிஞ்சிவேலன்)

55.ஆக்ஸ்ஃபோர்டின் இந்திய வரலாறு பாகம் ஒன்று - வின்சென்ட் ஏ ஸ்மித் - தமிழில் - தி.வெ.குப்புசாமி

56.யாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி

57.இயற்கையை அறிதல் - எமர்சன் (தமிழில் - ஜெயமோகன்)

58.உடைந்து எழும் நறுமணம் - இசை

59.நலமறிதல் - ஜெயமோகன்

60. எனது சிறைவாசம் - ஶ்ரீ அரவிந்தர்

61.திருநங்கையர் சமூக வரைவியல் - பத்மபாரதி

62.தடுக்கை - அண்டனூர் சுரா

63.கதாரசனை - கீரனூர் ஜாகிர்ராஜா

64.கருணாகரத் தொண்டைமான் - குடவாயில் பாலசுப்ரமணியன்

65.தேசத்துரோகி - ஷோபாசக்தி

66.எம்.ஜி.ஆர் கொலைவழக்கு - ஷோபாசக்தி

67.ஆக்ஸ்போர்டின் இந்திய வரலாறு பாகம் இரண்டு - வின்சென்ட் ஓ ஸ்மித்

68.கண்டிவீரன் - ஷோபாசக்தி (மறுவாசிப்பு)

69.முமீன் - ஷோபாசக்தி

70.கதாநாயகி - ஜெயமோகன்

71.மற்றவர்களின் சிலுவை - தொகுப்பாசிரியர் - தி.மரிய தனராஜ்

72.நொய்யல் - தேவிபாரதி

73.வருகைக்கான ஆயத்தங்கள் - இதயா ஏசுராஜ்

74.நரிக்குறவர் இனவரைவியல் - கரசூர் பத்மபாரதி (மறு வாசிப்பு)

75.நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிசாமி

76.வண்ணநிலவன் சிறுகதைகள் - 2011வரையிலான முழுத்தொகுப்பு 

77.இயக்கம் - குட்டிரேவதி

78.மீன்காரத்தெரு - கீரனூர் ஜாகிர்ராஜா

79.மீன்குகைவாசிகள் - கீரனூர் ஜாகிர்ராஜா

80.குட்டிச்சுவர் கலைஞன் - கீரனூர் ஜாகிர்ராஜா

81.அபிநவ கதைகள் - செல்வகேசவராய முதலியார்

82.அறிவு - நாராயணகுரு(உரை:நித்ய சைதன்ய யதி: தமிழில் - எம்.கோபாலகிருஷ்ணன்)

83.சங்காயம்- ச.துரை

84.உயிரின் யாத்திரை - எம்.வி.வெங்கட்ராம்

85.தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் - பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி), சோ.சிவபாதசுந்தரம்

Wednesday 25 May 2022

சிறை

 வானை அடைத்துப் பறந்தது மாபெரும் காகம். காகத்தை நோக்கி நிமிர்ந்த என் எண்ணம் முழுவதும் அதனால் உறிஞ்சப்பட்டிருந்தது. அது காலமற்ற வெளியா வெளியற்ற காலமா என்பதை என் பிரக்ஞை உணரவில்லை. நான் உடலா மனமா எண்ணமா இருப்பா ஏதுமின்மையா என்பதையும் என்னால் அறிய முடியவில்லை. ஆனால் கடற்கரையில் பதிந்த காலடிச்சுவடென என் பிரக்ஞை எங்கிருந்து நகர்கிறதோ அங்கெல்லாம் தன் தடத்தை பதித்துக் கொண்டே வந்தது.‌ எல்லாமும் இற்றுப்போகும் ஒரு நிலைக்கென நான் எப்போதும் ஏக்கம் கொண்டிருக்கிறேன். அதுதான் அப்போதெனக்கு நிகழ்ந்து கொண்டிருந்ததா? பறக்கும் காகத்தின் சிறகு வழியே காற்றென வீசுகிறது ஒளி. எத்தனை வண்ணங்கள் அவ்வொளிக்கு. காக்கையின் சிறகுகள் எந்நிறத்தையும் உள்ளனுமதிக்காத கருமை என்று எண்ணியிருந்தது எவ்வளவு பெரிய தவறு! அது ஒவ்வொரு நிறத்தையும் ஒளிரச் செய்து கொண்டிருந்தது. நான் ஒளியை உண்டு கொண்டிருக்கிறேன். வண்ண வண்ண ஒளிகள். எவ்வளவு காலமெனத் தெரியவில்லை. என் உடலில் ஆடை இருந்ததா என் உடலே இருந்ததா என்றெல்லாம் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் ஓரிடத்தில் இல்லை என்பது மட்டும் வெட்ட ஓங்கிய கொலைவாளென விரைத்திருக்கும் பளபளப்பான காக்கையின் சிறகின் வழியே அறிய முடிந்தது. எனக்கு வியர்க்கவில்லை. குளிரவில்லை. நாற்றமோ மணமோ நாசியில் ஏறவில்லை.‌ ஒலியோ ஒலியின்மையோ என் செவிகளில் இல்லை. இன்னதென எண்ணிக் கொண்டிருக்கும்போதே இன்னொன்றென மாறிவிடும் வண்ணங்களன்றி என் கண்களில் காட்சிகளும் இல்லை. ஆனால் நான் இருந்தேன்.‌என்னை நான் மிகத்தெளிவாக உணர்ந்தேன். நான் இருப்பதால்தான் இந்த இன்னதென விளக்கிவிட முடியாத பறத்தல் எனக்கு அச்சத்தை தருகிறது. சிறிய வீட்டில் பெரிதாகத் தெரிந்த பொருள் பெரிய வீட்டில் சிறிதாகவும் அசிங்கமாகவும் தெரிவதுபோல என் சின்னப் பிரக்ஞை அந்தப் பெரும் பிரக்ஞையுடன் முரண்டு கொண்டிருக்கிறதா?


என் பதற்றங்கள் என்னிடமிருந்தன.‌என் ரகசிய ஏக்கங்கள் அப்போதுமெனக்கு கிளர்ச்சி அளித்துக் கொண்டிருந்தன.‌‌ என் பயங்கள்‌‌ என்னை வதைக்கத் தவறில்லை.‌ ஆனாலும் நான் இருந்தேன். நான் இருப்பதை‌ உணர உணர மண்ணிலும் இறங்கிக் கொண்டிருந்தேன். வானம் காகத்தால் மூடப்பட்டிருந்தது. உச்சி வெயிலில் கிரகணம் நிகழ்ந்தது போல‌ சூழல் ஒளி கொண்டிருந்தது. மனிதர்கள் கண்ணுக்குத் தெரியத் தொடங்கினர். காற்றென வீசியது அக்காகத்தின் பெருமூச்சு. வெட்டவெளியில் படர்ந்த நிழலென அக்காகத்தின் கருவிழிகளை நான் கண்டேன். அக்காகம் அங்கிருக்கிறது என்ற எண்ணமே எனக்கு அச்சத்தையும் ஆறுதலையும் தந்து கொண்டிருக்கிறது. நான் என் பிரக்ஞையை மீட்டுக் கொண்டு கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். அது ஒரு கல்லூரி வளாகம் போலத் தெரிந்தது. வெகுகாலத்துக்கு முன்பு நான் அங்கே படித்திருக்கிறேன் அல்லது எதிர்காலத்தில் படிக்கவிருக்கிறேன். எதிர்பட்டவர்கள் அனைவரையும் நான் அறிந்திருந்தேன். அறிந்திருத்தல் என்றால் பெயரையோ நபரையோ அறிந்திருப்பதல்ல. அவர்களுடைய ஆழம் என் கண்களுக்குத் தெரிந்தது. அதுவே என்னை அச்சுறுத்தியது. இந்த அறிதல் நிகழ்ந்து கொண்டிருந்த கணத்திலேயே ஒரு பெண் ஓடிவந்து என்னை அறைந்தாள். நான் அங்கு ஆடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறேன் என்பது அவள் அறைந்தபிறகே எனக்கு உரைத்தது. நான் குன்றிப்போனேன். ஆனால் என் உடலை எனக்கு‌ மறைக்கத் தோன்றவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் நான் ஆடையில்லாமல் இருப்பது சரியென்றும் எனக்கும் தோன்றியது. ஆனால் அத்தோன்றல் என் அவமான உணர்வை அகற்றிவிடவில்லை. வெளித்தோற்றத்துக்கு கல்லூரி போலத் தெரிந்த அவ்விடம் தொடர்ந்து தன் முகத்தை மாற்றிக் கொண்டே வந்தது. மண்சுவர் கொண்ட ஒரு குடிசையில் பிரசவக் கவிச்சியுடன் ஒரு குழந்தை கிடக்கிறது. தெளிந்த நீரோடும் வாய்க்காலில் சேமையிலையில் நீர்சேந்திக் குடிக்கிறான் ஒரு சிறுவன். இன்னும் முடிக்கப்படாத தார்ச்சாலையின் மணத்தை நுகர்ந்தபடி சைக்கிளில் செல்கிறான் மற்றொருவன். வெள்ளைச் சீருடை வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டியிருக்க மிட்டாய் தின்கிறாள் ஒரு சிறுமி. பம்புசெட் அறையில் இருந்து முனகல்கள் கேட்கின்றன. வாழைத்தோப்புகளில் தவளைகள் குதிக்கின்றன. ஈரம் சொட்டும் தலையுடன் கோலமிடுகின்றனர் தாவணி அணிந்த பெண்கள். கைகளை உதட்டுக்கு நேரே குவித்து கண்மூடி கடவுளை வணங்குகிறாள் ஒருத்தி. மூக்கைத் துளைக்கிறது துளசியின் மணம். விந்தின் நாற்றம் சூழ நாக்கு வெளித்தள்ளி கயிற்றில் தொங்கிக் கிடக்கிறான் ஒரு ஆள். சிறுவனொருவனை அழுதுகொண்டே புணர்கிறான் நூறு கிலோ எடை கொண்ட மற்றொருவன். கோவில் மறைவில் விபூதி பூசி விட்டு முத்தமிட்டு ஓடுகிறாள் ஒருத்தி. சோற்றை உருட்டி விழுங்குகிறாள் ஒரு கிழவி. கண்விழித்துப் படித்துக் கொண்டிருப்பவன் கழிவறைக்கு எழுந்து ஓடுகிறான். புகையும் அடுப்புக்கு எதிரே அமர்ந்து கொண்டிருப்பவளின்‌ முதுகு நனைந்து போயிருக்கிறது. எழுதிக் களைத்தவர் கைகளில் நெட்டி முறிக்கிறார். முதன் முறை புணர்ந்த ஆண்குறியில் ரத்தம் வழிகிறது. ரசமட்டம் வைத்து சுவற்றின் நேர் பார்க்கிறார் கொத்தனார். பரவசத்துடன் காதல் கவிதை எழுதிக் கொண்டிருந்தவன் எழுதி முடித்த பரபரப்பில் சுயமைதுனம் செய்து கொள்கிறான். அடுத்தவன் மனைவியை வெறியுடன் புணர்கிறான். தத்துவ நூல்களை ஆழ்ந்து படிக்கிறான். முழுதாக தன்னை நிர்வாணப்படுத்திக்கொண்டு விஷம் குடிக்கிறாள். தூங்க இயலாமல் தவிக்கிறான். காலையில் எழுந்து சோம்பல் முறித்தவர் மாரடைத்து விழுகிறார். நெடி கொண்ட வேப்பங்குச்சியால் சுளீரென‌ கையில் அடிவிழுகிறது. நீலத் தாவணி அணிந்த பள்ளி மாணவியின் காலில் விழுந்து அழுகிறார் மனைவியை இழந்த கண்ணாடி அணிந்த ஆசிரியர். புறக்கழுத்தில் வெட்டிய அரிவாளை உருவ முடியாமல் வெட்டப்பட்டவனின் உடல் நீர் நிரம்பிய குடம்போலத் தள்ளாட அங்கேயே விட்டுவிட்டு ஓடுகிறான். யாருமில்லாத வகுப்பில் இரண்டு மாணவர்கள் கஞ்சா இழுக்கின்றனர். மறுநாள் திருமணத்துக்கென விடிய விடிய தாம்பூலப்பை போடுகின்றனர். குழந்தையின் முகத்தில் வேறொருவனின் சாயலைக்கண்ட தகப்பன் பிரசவ அறையைவிட்டு பிணம்போல வெளியேறுகிறான். ஒரே மூச்சில் ஒரு பியர் பாட்டிலை குடிக்கிறாள். மறுநாள் வேலை போய்விடும் என்று தெரிந்தவன் அன்றிரவு முழுக்க ஒரு வேலையை முடித்து நல்ல பேர் வாங்கப் போராடி அது இயலாததால் தூக்கம் அழுத்தும் காலை நான்கு மணிக்கு எச்சில் ஒழுக இனிய சிரிப்புடன் உறங்கும் மகளின் முகம் நினைவிலிருக்க மணிக்கட்டை அறுத்துக் கொள்கிறான்.


பேருந்து நிலையத்தில் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து பிச்சை கேட்கிறார் முதியவர். ஆர்டர் பண்ணிய பிரியாணி வருவதற்கென நாக்கில் எச்சில் ஊறக் காத்திருக்கிறான். மாதவிடாய் தொடங்காத பெண்ணை அறுப்பு முடிந்த வயலில் கிடத்திப்புணர்கிறார் அவள் தாத்தா வயதுடைய தலைநரைத்தவர். கொளுத்தும் வெயிலில் கம்மங்கூழ் வாங்கிக் குடிக்கிறான். செருப்பை கழற்றிவிட்டு சாப்பிடத் தொடங்குகிறான். இரவு முடியுமிடத்தை பார்ப்பதற்காக கண்விழித்து அமர்ந்திருக்கான். குறுஞ்செய்திகள் அனுப்பி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். வானத்துக்கு அந்தப் பக்கம் போய்விடுகிறான். அலுவலக கணினி முன்னே அமர்ந்து கொண்டு வாழ்க்கையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறான்.‌ பற்களை கடிக்கிறாள். ஒரே பைக்கில் சென்ற நான்கு நண்பர்களில் இரண்டு பேர் லாரிக்கு அடியில் செல்ல அதில் ஒருவன் தலை நசுங்குவதைப் பார்த்து ஒருவன் சிரிக்கிறான் மற்றொருவன் வாந்தி எடுக்கிறான். கழிவறையில் அமர்ந்து குறிக்குள் விரல் வைத்து நோண்டும் தோல்வியைச் பார்த்தவள் வாயில் ஒழுகும் எச்சிலை துடைத்துக் கொள்கிறாள். பற்குச்சியை வாயில் வைத்திருக்கும் வீங்கிய கண்களுடன் கண்ணாடியை பார்க்கிறான். கால் நொடித்து பக்கத்தில் நடந்த பெண்ணின் பெரிய முலையில் விழுந்தவனுக்கு செருப்படி விழுகிறது. மூத்த எழுத்தாளர் கடைசி காலத்தில் கவனிக்க ஆளின்றி தனிமையில் குடித்து செத்துக் கிடக்கிறார். வேலை முடித்து வந்து ஆசையாய் தூக்கிய குழந்தை வியர்வை நாற்றத்தால் இறங்கிக் கொள்கிறது.


யூடியூப் பார்த்து நடனம் கற்றுக் கொள்கிறாள். இடையளவு குறையவில்லை என ஏங்கி அழுகிறான். மீண்டும் பால் பொங்கிவிட்டதற்காக தன்னையே கடிந்து கொள்கிறான். மூங்கில் கூடையில் பீங்கான் பொம்மைகளின் தலைச்சுமை அழுத்த மயங்கி விழுகிறாள். மீண்டும் ஆத்திரத்தில் அலைபேசியை உடைக்கிறான். காலை மலர்ந்த செம்பருத்தி பூ ஒரு பெருமூச்சுடன் இரவுக்குள் விழுகிறது. புட்டத்தின் அருகிலிருக்கும் தன் புன்னை நக்குகிறது ஒரு நாய். தன் தனிமையை நினைத்து அன்றும் அழுகிறது சூரியன். உலகின் அத்தனை கடல்களும் பொங்குகின்றன. பிரபஞ்சம் என் பிரக்ஞைக்குள் மூழ்கிச் சிறைபடுகிறது. நான் கண் விழிக்கிறேன். என்னுள் ஒரு பிரபஞ்சம் சிறைபட்டிருப்பதே தெரியாமல் என் துக்கங்களை எடுத்து அணிந்து கொள்கிறேன். 


Thursday 5 May 2022

சரிவு

'அவன எதுக்கு உள்ளாற இழுத்து உடணும்' என்று சொன்னபடியே அம்மா என் கையைப் பற்றினாள். வாஞ்சை கூடிய பிடி. நான் அப்படியே நின்றுவிட நினைத்தேன். 


ஆனால் கண்ணாடியில் முகம் பார்த்தபடி சட்டை போட்டுக் கொண்டிருந்த அப்பா 'விடுடி அவன' என்றார். அம்மா பிடியை விடாமல் கண்ணாடிக்குள்ளிருந்த அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். கோபம் ஏறிய அப்பாவின் முகம் அம்மாவைப் பார்த்தது. அம்மா கையை விட்டுவிட்டாள்.‌ எனக்கு ஏமாற்றமாக இருந்தது. முன்பு போல‌ இல்லாமல் அப்பாவுடன் வெளியே செல்லும் விருப்பம் எனக்கு குறைந்து கொண்டே வந்தது. எதிர்விகிதத்தில் அவருக்கு என்னை உடனழைத்துக் கொண்டு செல்லும் விருப்பம் கூடிக்கூடி வந்தது.


'எவனோ ரெண்டாம் பங்காளி மூணாம் பங்காளி கல்யாணம் எழவுக்கெல்லாம் கூட்டிட்டு போனிய...இப்ப கோர்ட் ஸ்டேஷன்னு கூட்டிப்போய் அவனக் கெடுக்கணுமாக்கும்' என்று வாதம் புரியும் தொனியில் துணிகளை மடித்து வைத்துக் கொண்டே அம்மா கேட்டாள். அவளால் சீராக மடிக்கப்பட்டிருந்த மயில்கழுத்து நிறப் புடவையை பிரித்து அதன் மென்மையில் கையோட்டிக் கொண்டிருந்தேன்.


'ஆம்பளன்னா ஊர்ல என்ன நடக்குதுன்னெல்லாம் தெரியணும்டி... சும்மா வீட்லயே பொத்தி வச்சு மடப்பயலா போறதுக்கா' என்று சொன்னபடியே என் கையிலிருந்த புடவையை வாங்கி கட்டிலில் வீசினார்.‌ அது களைந்து விழுந்தது.


சிவப்பு ஓடுகள் புழுதியால் மூடப்பட்ட ஒரு ஓட்டுக் கட்டிடம்தான் காவல் நிலையம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.‌ டிவிஎஸ் பிப்டியை வாசலில் நிறுத்திவிட்டு என்னையும் அழைத்துக் கொண்டு அப்பா உள்ளே நுழைந்தார்.


தன் முன்னே அழுது கொண்டிருந்த ஒரு கருநிறப் பெண்ணிடம் ஏதோ கடுமையாகப் பேசிக் கொண்டிருந்த உதவி ஆய்வாளர் அப்பாவைப் பார்த்ததும் புன்னகையுடன் தலையை அசைத்து 'வாங்க சார்' என்று வரவேற்றார். திரும்பும் போது அவர் தலையிலிருந்த பெரிய கொண்டையைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது.‌ ஆனால் அதைவிட பயம் அதிகமாக மனதைக் கவ்விப் பிடித்திருந்ததாலோ என்னவோ நான் சிரிக்கவில்லை.


அப்பா அந்த கருநிறப்பெண்ணை கடுமையாகப் பார்த்தபடியே உதவி ஆய்வாளருக்கு எதிரே அமர்ந்தார்.


'பையனா?' என்று என்னைப் பார்த்துவிட்டு அப்பாவை கேட்டார்.‌ அப்பா ஆமோதிப்பாக தலையசைத்தார்.


நான் அப்போதுதான் அந்தப் பெண்ணிடமிருந்து சற்று தூரம் தள்ளி தமிழ் மாமா நிற்பதை கவனித்தேன்.‌ அவர் முகத்தில் அழுத கண்ணீர் கோடுகள் காய்ந்திருந்ததை பார்க்க ஒருவித ஒவ்வாமை எழுந்தது.‌ அழும் ஆண்கள் பலகீனமானவர்கள் என்று அந்த வயதில் நம்பியிருந்தேன். தமிழ் மாமாவுக்கு அருகிலேயே எனக்கு பெயர் தெரியாத என் ஊர்க்காரர்கள் சிலர் நின்றிருந்தனர்.‌‌ அவர்களுடைய உடல்மொழி மாமாவை அடிப்பது போல இருந்தது.‌ நான் மேலும் பயந்து போனேன்.


'இப்ப என்னடா சொல்ற நீ?' என்று சட்டென எழுந்து மாமாவை நோக்கிச் சென்றார் அப்பா. மாமா பயந்து பின்வாங்கினார்.


'சார் வக்கீல் வர்ற டைம். இவள நான் இங்க கூட்டிட்டு வந்ததுக்கே அந்த ஆளு என்னைய கொடைவான். ஒழுங்கா கேட்டு வைங்க' என்று உதவி ஆய்வாளர் சலிப்புடன் சொன்னார்.


அப்பா மாமாவை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்கு வெளியே இருந்த டீக்கடைக்கு வந்தார்.


'உட்காரு' என நாற்காலியை மாமாவிடம் காட்டினார்.


அவர் அமர்ந்ததும் 'தமிளு இவெல்லாம் நமக்கு ஒத்துவரமாட்டா. ஒரே ஜாதிதான். அதுக்குன்னு வந்தாருகுடி அதுவும் அவ அப்பன் கூலி வேலைக்குப் போறவன். இவல்லாம் நமக்கு ஒத்து வருமா சொல்லு' என்று தணிவாகச் சொன்னார்.


என்னைப் பார்த்து 'நீ அங்க போயி நில்லு' என்றார்.


நான் என் காதுகளை அவர்களிடம் விட்டுவிட்டு சற்று தள்ளி நகர்ந்தேன்.


அப்பா மேலும் தணிந்த குரலில் சொன்னார்.


'வயசுல இப்படி கை நெனைக்குறது சகஜம்தான். அதுக்குன்னு கல்யாணம் வரைக்கும் போகமுடியுமா சொல்லு'


'இல்லண்ணே அவ என்ன நம்புறா' என்று மாமாவின் குரல் மேலும் தணிவாக ஒலித்தது. தமிழ் மாமா அப்பாவின் அத்தை மகன்தான் என்றாலும் அப்பாவை அண்ணன் என்றுதான் கூப்பிடுவார். ஊரில் அவர் வயதை ஒத்த பலரும் அண்ணன் என்று மரியாதையாக அழைப்பவரை அத்தான் என்றோ மச்சான் என்றோ அழைக்க அவருக்கு கூச்சமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


'என்ன லவ் பண்றியாக்கும்' அப்பாவின் இளக்காரமான குரல் எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. தமிழ் மாமாவின் உடலில் ஒரு குன்றல் உருவானது.‌ அந்தக் குன்றலால் அவரை மேலும் வெறுத்தேன். 


'இங்கபாரு.‌ அவ ஏற்கனவே ரெண்டு தடவ புள்ள அழிச்சிருக்கா. அதுக்கு சாட்சியெல்லாம் ரெடி பண்ணியாச்சு. உன்னைய பின்னாடி ஏதாவது மெரட்டுவான்னு பயந்தேன்னா புள்ள அழிச்ச கேஸ்ல அவள உள்ளத்தூக்கி போட்றலாம். அவ மெரட்டலுக்கு எல்லாம் பயந்துறாத என்ன' என்று மாமாவின் தோளில் தட்டினார்.


அப்பா ஏதோ தவறாகச் சொல்கிறார் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் மாமாவின் முகம் அப்பா சொல்வதை ஏற்றுக் கொள்வது தெரிந்தது. அந்த ஏற்பினை உணர்ந்து கொண்டவராக அப்பா மேலும் சொன்னார்.‌ அவர் குரல் இன்னும் தணிந்தது. 


'வயசுல இப்படித்தான் எவளோட நாத்தமாவது புடிக்கும். ஆனா காலத்துக்கும் அந்த நாத்தத்தோட வாழ முடியுமா சொல்லு.‌ அவளப்பாரு கரிக்கட்ட மாதிரி இருக்கா. நடந்து போனான்னா பேண்டுட்டு இருக்கிறவன் கூட எந்திரிக்க மாட்டான்.‌ இவளோட காலம்பூரா ஓட்டப்போறியா'


அப்பா மெல்ல மெல்ல மாமாவை ஜெயித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மாமாவின் முகம் சற்று தெளிந்திருந்தது. 


'உள்ளபோறப்ப அவளும் அவ அம்மாவும் என்னென்னவோ மாய்மாலமெல்லாம் காட்டுவாளுங்க,கால்ல வந்து விழுவாளுங்க,நெஞ்சுல அடிச்சிகிட்டு அழுவுவாளுங்க,சாபங்கொடுப்பாளுக,மெரட்டுவாளுக...ஆனா நீ சொல்ல வேண்டியது 'எனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல' இதையே திரும்பத் திரும்ப சொல்லு'  


தமிழ் மாமா அப்போது அப்பா அவரிடம் ஒரு கத்தியை கொடுத்து அந்த கருநிறப் பெண்ணின் தலையை வெட்டச் சொல்லி இருந்தால்கூட செய்திருப்பார் என்று தோன்றுகிறது. அவளைக் கைவிட அவர் சம்மதித்தது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.


மாமாவை வெளியில் நிறுத்திவிட்டு அப்பா என்னை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்குள் போனார். அப்பெண்ணின் அம்மாவும் - அவளும் அட்டைக் கருப்பு - வக்கீலும் வந்திருந்தனர்.


வக்கீல் அப்பாவைப் பார்த்து சிரித்தார்.


'என்ன சண்முகம் மச்சானுக்கு ஓத வேண்டியதெல்லாம் ஓதிட்டீங்களா' என சற்று கசப்பு தொனிக்க கேட்டார்.


'தேவல்லாத பேச்செல்லாம் எதுக்கு தம்பி. படிச்சு வக்கீலாகி நம்மாளுக கேஸெல்லாம் முடிச்சு வைப்பேன்னு பாத்தா நீ இப்படி ப்ரோக்கர் வேல பாத்துட்டு திரியுற. நான் ஏதும் உன்ன கேட்டனா' 


வக்கீலின் முகத்தில் அந்த எதிர்பாராத அடி பதற்றத்தை உருவாக்குவது தெரிந்தது. அவர் குரலில் இணக்கம் குறைந்து மீண்டும் வக்கீலானார்.


'மேடம் நீங்க பையன உள்ள வரச்சொல்லுங்க. அவஞ்சொல்லட்டும் இந்தப் பொண்ண லவ் பண்ணினா இல்லையான்னு' 


அப்பா சற்று கோபமாக இடைமறித்தார். 


'பையனெல்லாம் வரசொல்ல முடியாது'


எனக்கு அப்பா ஏன் அப்படிச் சொன்னார் எனப் புரியவில்லை.‌ நான் அந்தக் கருநிறப்பெண்ணைப் பார்த்தேன். கழுத்து எலும்பின் மேல் ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி. குளத்தின் நடுவே கிடக்கும் பழுத்த இலை போல அவ்வளவு அழகாக இருந்தது அந்தச் சங்கிலி. நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் அழகியாகிக் கொண்டிருந்தாள். மாமாவின் அழகும் அவளிடம் சேர்ந்தது போலிருந்தது. சோகமே உருவென நின்று கொண்டிருந்தவளுக்கு உள்ளே எங்கோ ஒரு மூலையில் ஒருத்தி சற்று சலிப்புடன் இந்த அரசாங்க சூதுகளை கவனித்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. கதையால் நனைக்கப்பட்ட பெண் எப்படி இருந்தாலும் அழகியாகிவிடுகிறாள். இப்போது அவள் உடல் என் மனதில் பதிந்த கதையின் முக்கிய அங்கமாகி இருந்தது. அப்பா ஏன் பதறுகிறார் எனப் புரிந்தது.


வக்கீலுக்கும் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிக் கொண்டிருந்தது. என்ன செய்து அவள் தமிழ் மாமாவை சம்மதிக்க வைக்கப் போகிறாள் என்பதை மட்டும் என்னால் ஊகிக்க முடியவில்லை. அப்பா சொன்னது போல அவள் அழவோ காலில் விழவோ போவதில்லை என்று நன்றாகவேத் தெரிந்தது. அதை அப்பாவும் உணர்ந்தவராக வெளியே ஓடினார். விரைவாக நடப்பவரெனினும் அவரிடம் ஒரு நிதானம் எப்போதுமிருக்கும்.‌ அந்த நிதானத்தை அவர் இழந்திருந்தார்.


கடைவாசலிலேயே உட்கார்ந்திருந்த தமிழ் மாமாவிடம் விரைவாகச் சென்றார்.‌‌ அவர் எழுவதற்குள்ளாகவே 'அந்தத் தேவிடியா கண்ண மட்டும் பாத்திராத' என்று முகத்துக்கு நேரே விரலை நீட்டி எச்சரித்தார். மாமா உள்ளே வந்தபோது மொத்த காவல் நிலையமும் அமைதியாக இருந்தது. மாமா உதவி ஆய்வாளரைப் பார்த்து 'மேடம் இவள எனக்கு தெரியும்.‌ஊர்க்காரப் பொண்ணு. ஆனா அவசொல்ற‌ மாதிரி நான் அவள லவ்வெல்லாம் பண்ணல. இனிமே இதுமாதிரி என்ன‌ இவ டார்ச்சர் பண்ணாம நீங்கதான் கண்டிச்சு விடணும்' என தமிழ் மாமா திக்கித் திணறி சொன்னார்.


அனைவருக்கும் அது பொய்யென்று தெரிந்தது. அப்படி ஒரு வெளிப்படையான ஆனால் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டிய ஒரு பொய் சொல்லப்படும்போது சூழலில் ஒரு மௌனம் உருவாவதை பலமுறை கவனித்து இருக்கிறேன்.‌ சமீபத்தில் கூட அதாவது நேற்று தமிழ் மாமா இறந்தவன்று நான் இரங்கல் கூட்டத்தில் என்ன பேசினேன்? வேதாரண்யத்தில் இரால் பண்ணையில் பங்குதாரராகி லட்ச லட்சமாக சம்பாதித்து சூப்பர் மார்க்கெட் பால்பூத் ஐஸ்க்ரீம் பார்லர் என ஏகப்பட்ட தொழில்கள் செய்து வளர்ச்சி அடைந்து ஊரெல்லாம் காசு கொடுத்து காதலிகளை உருவாக்கிக் கொண்டு அவர்கள் கொடுத்த சீக்கில் செத்துப்போனவர் தமிழ் மாமா. ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார். அவரைப்பற்றி உழைப்பால் உயர்ந்த உத்தமர் மனிதநேயம் மிக்கவர்  என்றெல்லாம் நான் பேசியபோது அக்கூற்றுகளில் இருந்த பாதி பொய்மைக்கே கூட்டம் அமைதியானதே! ஆனால் அன்று காவல் நிலையத்தில் அந்த அமைதியை அக்கருநிறப்பெண் வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டாள் என்று தோன்றுகிறது. ஒரு மெல்லிய மூக்குறிஞ்சல் கைகளை தழைத்துவிட்டதால் கண்ணாடி வளையல்கள் முட்டிக்கொள்ளும் ஒலி அவள் புடவையின் சரசரப்பு. இவற்றால் தாக்குண்டு தமிழ் மாமா முகத்தை நிமிர்த்திய போது அவள் கூந்தலில் இருந்து விழுந்த மஞ்சள் ரோஜா. தமிழ் மாமா அழுதுகொண்டே அவள் காலில் போய்விழ இவ்வளவு போதுமானதாக இருந்தது.‌ அப்பா என் மணிக்கட்டு வலிக்கும்படி கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு யார் முகத்தையும் பார்க்காமல் காவல் நிலையத்தைவிட்டு வெளியேறினார். 


அப்பா அதன்பிறகு சரிந்து கொண்டே இருந்தார்.‌ அவரிடமிருந்த மிடுக்கும் அலட்சிய பாவனையும் காணாமல் போனது. நானுமே அவருடன் சேர்ந்து சரிந்து கொண்டிருந்தே‌ன் என்று எட்டு வருடங்கள் கழித்து ஒரு உதவாத பொறியியல் கல்லூரிச் சான்றிதழுடன் தமிழ் மாமாவிடம் ஏதாவது வேலை வாங்கித் தரும்படி அப்பா என்னையும் அழைத்துக் கொண்டு போய் நின்றபோதுதான் எனக்குத் தெரிந்தது.


அன்று நானும் அப்பாவும் வீட்டுக்குத் திரும்புவதற்கு முன்பாகவே அம்மாவுக்கு அவளுக்கே உரித்தான பிரத்யேக வழிகளின் மூலம் காவல் நிலையத்தில் நிகழ்ந்தவை தெரிந்துவிட்டன. தனக்கே பதினோரு வயது மகள் இருக்கிறாள் எனினும் பொதுவாக காதலின் வெற்றி பெண்களுக்கு அளிக்கக்கூடிய உற்சாகத்துடன்,அந்த உற்சாகத்தை கவலையென மாற்றிக் கொண்ட தொனியில் 'என்ன அவ கால்ல போய் விழுந்துட்டானாமா' என்று கேட்டாள். 


இன்னும் வாசலிலேயே நின்று கொண்டிருந்த அப்பா 'அறைஞ்சு பல்லப் பேத்துருவேன். நாடுமாறி முண்ட...என்ன கொழுப்பெடுத்து திரியுறா' என்று அம்மாவை ஓங்கி அறைந்துவிட்டு புறப்பட்டுவிட்டார். இதுபோல அடிவாங்கும் சமயத்தில் எல்லாம் உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த அநீதியும் இழைக்கப்பட்டவள் போல அம்மா என்னை பார்ப்பாள். நானும் கரைந்து அழுதுவிடுவேன். ஆனால் அன்று அம்மா அடிவாங்கியது எனக்கு திருப்தியாக இருந்தது.‌‌ சாய்மானத்துக்கு என என் முகத்தை ஏறிட்டவள் அதிலிருந்து திருப்தியைக் கண்டு சற்று நடுங்கிப்போனாள். 


நான் நடுக்கத்தை கூட்டும் படி 'அவர்தான் கோவமா இருக்காருன்னு தெரியுதுல்ல அப்புறம் ஏம்மா வெவஸ்தகெட்டத்தனமா பேசுற?' என்று சொல்லி உள்ளே போனேன். அப்பா களைத்துப்போட்ட மயில்கழுத்து நிறச்சேலை மடித்து வைக்கப்பட்டிருந்தது. நான் சரியத் தொடங்கியது மிகச் சரியாக அந்த தருணத்தில் இருந்துதான்.