Sunday 8 May 2016

24 - என் விமர்சனம்


ஒரு சமூகம் தன் கலை வடிவங்கள்  (இசை, ஓவியம், நடனம், எழுத்து போன்றவை) குறித்து  நுண்ணுணர்வும “மந்தைத்” தன்மை இல்லாத சுய ரசனை  சார்ந்த  பார்வையையும் உருவாக்கிக்  கொள்ளும்  போது  தான்  தனித்த  அடையாளங்கள்  கொண்ட  பன்மைத் தன்மை  அச்சமூகத்தின் முகமாக  அமைந்து வலுப்பெறும்.  பெரும்  பொருட்செலவிலும் அதிகமான  மனிதர்களின்  உழைப்பினாலும் உருவாக்கப்படும்  திரைப்படத்திற்கும் இக்கூற்று பொருந்தும். சுய ரசனை  சார்ந்த  பார்வையை  திரைப்படத்தின் மீதும்  உருவாக்குதே என் விமர்சனத்தின் நோக்கம்.

இனி….
       படத்தின்  பெயர்  மற்றும்  முன்னோட்டத்திலிருந்து (ட்ரைலர்) இதுவொரு நேரத்தில்  பயணிக்கும் வகையான  அறிவியல்  புனைவுத்  திரைப்படம்  என்ற எண்ணம்  ஏற்கனவே  உருவாக்கப்பட்டிருந்ததாலும் இயக்குநரின்  முந்தைய  படம் (யாவரும் நலம்) அளித்த  நம்பிக்கையாலும் இப்படம்  ஒரு நேர்மறையான எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி  இருந்தது. ஒரு கழுகின் பார்வையில்  தொடங்கும்  முதற்காட்சியும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்துவதாகவே உள்ளது. “ப்ரஸ்டீஜ்” திரைப்படத்தை சற்றே  நினைவுறுத்தினாலும் முதற்காட்சியில் காட்டப்படும் இயற்கைச்  சூழலும்  புகைவண்டியும் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளன.கடிகாரங்களையும் ரசாயனங்களையும் கொண்டு  ஒரு கையளவுடைய காலப்பயண எந்திரத்தை (time  traveller) உருவாக்க  முயன்று  கொண்டிருக்கிறார் விஞ்ஞானி  சூர்யா . பல படங்களில்  வருவதைப் போல இதிலும்  “விஞ்ஞானி” சூர்யாவுக்கு  கண்ணாடி  அணிந்த  அப்பாவி  முகம் . வழக்கம்  போல்  எந்திரம்  பூர்த்தி  அடையும்  போது  வில்லன்  வருகிறார். வில்லன்  கோட் சூட்  அணிந்து  ஒழுங்காக  சவரம்  செய்த  இன்னொரு  சூர்யா. விஞ்ஞானியின்  சகோதரன்.  உச்சரிப்பிலும் உடல்மொழியிலும் “வில்லன்” சூர்யாவிடம் நல்ல  முன்னேற்றம். அவருடைய  வில்லத்தனங்கள் ரசிக்கும்  படி உள்ளன. சில அறிவியல்  விளையாட்டுப்  பொருட்களைக் கொண்டு  தனது குழந்தையை  மட்டும்  தான் கண்டுபிடித்த  காலத்தில்  பயணிக்கும்  கடிகாரத்துடன் தப்பிக்க  வைத்து  விட்டு  சூர்யாவும்  அவர் மனைவி  நித்யா  மேனனும் இறக்கின்றனர். அப்போது  எசகுபிசகாக அடிபடும்  வில்லன்  சூர்யா  ஸ்டீபன்  ஹாக்கின்ஸ் போல் வீல் சேரில்  அமர்கிறார். கர்ணனும் கவச குண்டலமும் போல குழந்தையுடன்( இன்னொரு  சூர்யா) பயணிக்கிறது  அவன்  அப்பா கண்டுபிடித்த  கால எந்திரம். கருப்புத்  திரையில்  இருபத்தாறு  ஆண்டுகளுக்கு  பின் என வருகிறது. வழக்கம்  போல்  வில்லன்  சூர்யா  மீண்டும்  களம் இறங்குகிறார். அதே கால எந்திரத்தை உருவாக்க நினைக்கிறார். அதே நேரத்தில் வாட்ச்  மெக்கானிக்கான  கதாநாயகனுக்கு கையில்  அணியக்கூடிய வாட்ச்  போன்ற  கால எந்திரத்தை பூட்டி  வைத்திருக்கும்  பெட்டியின்  சாவி கிடைக்கிறது. இதுவரை ஒரு சிறந்த  அறிவியல்  புனைவிற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படம்  அதை துளியும்  நிறைவேற்றாமல்  நகர்கிறது. அந்தக்  கடிகாரத்தை திருகினால் மொத்த  உலகத்தையும் மியூசிக்  பிளேயர் போல “பார்வர்ட்”, “ரிவர்ஸ்”, “பாஸ்” செய்ய  முடியும். அப்படி  கதாநாயகன்  அடிக்கடி  “பாஸ்” செய்து  மழை வருதற்கு முன்பு  மொட்டை மாடியில்  காயும்  துணிகளை எடுக்கிறார் ஒரு சின்ன  பையனின்  ஐஸ்கிரீம்  கீழே விழாமல்  காப்பாற்றுகிறார் எச்சில்  துப்பும்  ஒரு “பொறுப்பற்ற” குடிமகனை அவன் துப்பிய  எச்சிலைக் கொண்டே  தண்டிக்கிறார் சமந்தாவுக்கு பூ பொட்டு வைத்து  விடுகிறார் தோனியுடன் செல்பி எடுக்கிறார். தொடக்கக் காட்சிகள்  ஏற்படுத்தும்  பரபரப்புக்கு சம்மந்தமே இல்லாமல்  சமந்தாவுடன் டூயட்  பாடுகிறார். பெரும்பாலும்  டூயட்டுகளில் ஐரோப்பிய நகரத் தெருக்களையும் உடைகளையும் நம் படங்கள் அதிகம் பயன்படுத்துவதாகத் தோன்றுகிறது.வில்லன்  சூர்யா  விரிக்கும் வலையில்  கதாநாயகன் சிக்கும்  இடைவேளையில் மீண்டும்  பெரிதாக  எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

தம்பியின்  மகனைக்  கொண்டே  காலத்தில்  பின்னோக்கிச் சென்று  தனக்கு  நடந்த  விபத்தினை தடுத்து  தன்னுடைய  இளமையை  மீட்டுக்  கொள்ள  நினைக்கிறார்  வீல் சேரில்  அமர்ந்திருக்கும்  வில்லன். கதாநாயகன் சூர்யாவுக்கு  தன்னுடைய  உண்மையான  பெற்றோர்  யாரெனத் தெரிகிறது. தன்னை  வளர்த்தவரான சரண்யாவை  அவருடைய  குடும்பத்தோடு சேர்க்கிறார். அதே குடும்பத்தை  சேர்ந்த  சமந்தாவோடு மீண்டும்  காதலை புதுப்பித்துக்  கொள்கிறார். வில்லன் சூர்யாவை நம்பி இருபத்தாறு  வருடங்கள்  அவர் பின்னோக்கிச் செல்ல  உதவுகிறார். கிட்டத்தட்ட  எதிர்பார்த்த  படியே  உச்சகட்டம்.

இத்திரைப்படத்தில்  முதல்  சிக்கல்  கதையின்  மையமான  அந்த “வாட்ச்” செயல்படும்  விதம் நம்பகத்தன்மையோடு குறைந்த அளவில்  கூட விளக்கப்படவில்லை. தற்செயலாக  விழும்  கழுகின்  சிறகினால் ஒரு ரசாயன  மாற்றம்  நிகழ்ந்து  அந்த எந்திரம்  உருவாகி  விடுகிறது  என்பதோடு இயக்குநர்  நிறுத்திக்  கொள்கிறார். படம்  முழுக்க  அதுவொரு  வித்தை காட்டும்  கருவியாக  மட்டுமே  உபயோகப்பட்டிருக்கிறது. போதிதர்மனை வைத்து  “கண் மயக்கு” காட்டியது  போலவே  இப்படத்திலும் அடிக்கடி  படத்தை  “நிறுத்தி” “ நிறுத்தி” விளையாடுகிறார்கள். தரமான  திரைப்படங்களை  உருவாக்க  நினைப்பவர்கள் நிச்சயம்  அத்திரைப்படம் கையாளும்  துறையைப்  பற்றிய  ஒரு நேர் முக அறிமுகத்தை  ஏற்படுத்திக்  கொள்வார்கள். இத்திரைப்படத்தில்  அப்படிப்பட்ட  அறிகுறிகள்  தென்படவில்லை. மேலு‌ம்  காலப் பயணம்  போன்ற வலுவான  பிண்ணனியை அமைத்துக்  கொண்டு  “இளமையை” மீட்டுக்  கொள்ளுதல்  போன்ற  வலுவற்ற   நோக்கங்களைக் கொண்டு படம்  நகர்வதும் அபத்தமாகவே உள்ளது. வில்லன்  சூர்யாவுக்கும்  கதாநாயகனுக்குமான சடுகுடு  படத்தை  கீழே விழுந்து  விடாமல்  தடுக்கிறது. பிரபலமான  ஒரு கதாநாயகனை வைத்து படமெடுத்தால் சில காட்சிகள் மட்டும் ரசிக்கும்  படி இருந்தால்  போதும்  என இயக்குநர்கள்  நினைக்கிறார்களோ என்ற சந்தேகம்  எழுகிறது. நாம்  இந்த “பிரபல  நாயகத்  துதிகளை” ஊக்கப்படுத்தாமல் இருப்பது  நல்லது. சமீபத்தில்  வந்த இந்த  பிரபலங்களின்  படங்கள்  “அருதப்பழைய” கதைகளைக்  கொண்டிருந்தும் சில காட்சிகளுக்காக வெற்றி பெறுவது  நம் ரசனை  இறக்கத்திற்கான உதாரணங்கள். ஒருவருக்காக பேசாமல்  இருக்கும்  குடும்பம்  சமந்தாவும் சத்யனும் ஷட்டரில் மாட்டிக்  கொள்வது  வில்லன்  வாயில்  பீடிங் ரப்பர்  வைப்பது  என ஆங்காங்கே  சில காட்சிகள்  ரசிக்க  வைக்கின்றன. தொழில்நுட்ப  ரீதியில்  குறைகள்  இல்லையென்றாலும்  பிண்ணனி  இசை ஏ.ஆர்.ரகுமான்  என்பதை  நம்ப முடியவில்லை. தொய்வாகவே சென்றாலும் சில ரசிக்கும்  படியான  காட்சிகளால்  ஏமாற்றம்  இல்லாமல்  திரையரங்கை விட்டு வெளிவர முடிந்தது.

2 comments: