Monday 9 May 2016

நுண்ணுணர்வும் நுகர்வுணர்வும்




நுண்ணுணர்வும்  நுகர்வுணர்வும்

அந்நியமாதலும் ஆனந்தமாதலும்   என்ற கட்டுரையின்  தொடர்ச்சியாக இதனைக்  கொள்ளலாம்  எனினும்  இதன் பேசுபொருள்  தன்னளவில்  தனித்ததும் கூட.

தலைமை  என்பது  அனைத்துத்  துறைகளிலும்  மதிக்கப்படும்  அறிவுடையவர்களால் விரும்பப்படும்  ஒன்றாகவே  இருந்து  வந்துள்ளது. ஒப்பு நோக்கும்  போது ஒரு தொழில் நிறுவனத்தில்  சற்று உயர்ந்த நிலையில்  இருக்கும்  ஒருவர்  ஒரு மாவட்ட  ஆட்சியரை விட அதிகம்  சம்பாதிப்பவராகவும் அதிக  சுதந்திரம்  உடையவராகவுமே இருப்பார். இந்திய  குடிமைப்  பணித்  தேர்விற்கு  உந்துதலோடு தீவிரமாக  தயார் செய்யும்  ஒரு மாணவருக்கு பெரும்பாலும்  இது தெரிந்தும்  இருக்கும். இருந்தும்  பெரும்பாலான  திறன் நிறைந்த  மாணவர்கள் தொடர்ந்து  குடிமைப்  பணிகளை நோக்கி  உந்தப்படுவது ஏன்? பெரும்  பணம்  சம்பாதிக்கும்  வேலையை  விடுத்து  லாபம்  குறைவென்றாலும் சுய தொழில் தொடங்க சிலர்  துடிப்பது  ஏன்? கணவனை இழந்தோ அல்லது  பிரிந்தோ வாழும்  பெண்களில்  சிலர்  பிடிவாதமாக  மறுமணத்தை மறுப்பது ஏன்?  அனைத்திற்கும்  வேறு வேறு காரணங்கள்  இருந்தாலும்  மேற்சொன்ன அனைவரையும்  ஒரு பொதுத்  தளத்திற்குள் கொண்டுவர  முடியும். இடர்பாடுகளை  தெரிந்தே  உழைக்கும்  ஒரு ஆட்சியாளர்  தன் ஆழ்மனதில் விரும்பும்  மாற்றத்தை  சமூகத்தில்  காண விழைகிறார். தன் மனம்  விரும்பும்  விதத்தில்  தன் துறையை  கட்டமைக்க  நினைக்கிறான்  தொழில் தொடங்க நினைக்கும்  ஊழியன். தயவுகளை நம்பாமல் தன்னை தலைமையாகக் கொண்டு  தன்னை சார்ந்திருப்பவர்களை வழி நடத்த  நினைக்கிறாள்  அப்பெண். ஒவ்வொரு  இடத்திலும்  தலைமையை ஏற்க விழைபவர்களின் அடிப்படை  எண்ணம்  ஒன்றாகவே  இருக்கிறது. தன் பங்களிப்பு  ஒரு செயலில் அதிகம்  இருக்க  வேண்டும்  என்ற எண்ணம். ஒரு செயலில்  தன்  பங்களிப்பு  அதிகமானதாகவோ அல்லது  தன்னால்  ஒரு செயல் முடிய  வேண்டும்  என்று நாம் எண்ணுவதோ ஏன்?  இதற்கு  சற்று ஆழமான  காரணம்  இருக்க வேண்டும். கொஞ்சமாவது புவியை  கவனிப்பவர்களுக்கு ஒன்று  புரியும். இந்த உலகிலும்  அது இடம் பெற்றிருக்கும்  இப்பேரண்டத்திலும் நம் கட்டுப்பாட்டிற்குள்  எதுவுமே  இல்லையென. பிறந்த அனைத்து  மனிதர்களும்  இறந்தும்  விட்டனர். விதிவிலக்குகள் இதுவரை  இல்லை.  தாள முடியாத  துக்கத்தினால் இறந்த சில மாமனிதர்கள்  உயிர்த்தெழுந்து விட்டதாகவும்  சிலர் இறக்கவே இல்லையென்றும் நாம் நம்பத்  தலைப்பட்டாலும் பிறந்தவர்கள்  சில ஆயிரம்  வருடங்கள்  நினைவுகளாய்  எஞ்சலாம் என்பதைத்  தாண்டி  இங்கு பிறந்த அனைவருமே  இறந்துதான் ஆக வேண்டும். பெரும் பிரபஞ்சத்தில்  நம் பிறப்பும் இறப்பும்  துளி நிகழ்வு. இவ்வளவு சோர்வு  தரும்  நிச்சயமின்மையிலிருந்து தப்பிக்க  ஒரு வழி உண்டெனில் அது நம்  பங்களிப்பு  இருக்கக்  கூடிய  செயல்களே. அத்தகைய  செயல்களில்  நம்மை ஈடுபடத்  தூண்டுவதே நம் நுண்ணுணர்வு. ஆங்கிலத்தில் instinct.

காதல்  அப்படிப்பட்ட  பங்களிப்பு  இருக்கக்  கூடிய  நுண்ணுணர்வு. தான் உடலுறவு  கொள்வதற்கும் சேர்ந்து  வாழ்வதற்கும்  இவன்/இவள் தான் சரி என்ற ஒரு முடிவு  எடுத்த பின் அந்த உணர்விற்காக அதுவரை இருந்த  தன்னுடைய  அடையாளங்களை  துறக்க வைக்கக்  கூடிய  அளவிற்கு  அவ்வுணர்விற்கு வலிமையுண்டு. எந்தத்  துறையில் நிபுணர்களாக இருந்தாலும்  அவர்களிடம்  நாம் காணக்கூடிய ஒரு அடிப்படை  ஒற்றுமை  துறை சார்ந்த  நுண்ணுணர்வு. எந்திரத்தின்  சப்தத்தை கொண்டு  அதில்  ஏற்பட்டிருக்கும்  சிக்கலையும்  குழந்தையின்  அழுகையைக் கொண்டு  அழுவதற்கான  நோக்கத்தையும் மக்களின்  உரையாடல்களைக் கொண்டு  அவர்களின்  உளநிலையையும் மாணவர்களின் நடவடிக்கைகளைக் கொண்டு அவர்களின்  நாடித்துடிப்பையும் அறிய முடிந்தவர்கள்  தத்தமது  துறைகளில்  வல்லுநராக நாள் அதிகம்  எடுக்காது. ஆனால்  நுண்ன
ணுணர்வின் அவசியம்  என்ன?  நாம்  அனைவரும்  ஏதோவொரு விதத்தில்  நம் தடங்களை  விட்டுச்  செல்லவே  விழைகிறோம். என்னைப்  பொறுத்தவரை  அது மிக நியாயமான  விழைவு. நிறைய சம்பாதித்தல் நிறைவான  மண வாழ்க்கை  போன்ற எளிய  இச்சைகளைக் கடந்து நமக்கே  உரித்தான  தீவிரமான  ஒரு திறனை நம்முள்  கண்டு  கொள்ளும்  போது  தான்  தடங்களை விட்டுச்  செல்வதற்கும் நுண்ணுணர்வுக்குமான நெருக்கம்  நமக்கு  புரிய வரும்.  உதாரணமாக  இந்திய சுதந்திரப்  போராட்டம் என்ற ஒற்றைப்  பெருஞ்செயலில் கோடிக்கணக்கானவர்கள் பங்கு பெற்றாலும்  ஒரு சிலர்  மிளிர்வதற்கு அவர்களின்  அதிகமான பங்களிப்பு  முக்கிய  காரணம். அதிலும்  அப்போரட்டத்தின் மையமாக  விளங்கிய  காந்தி உயர்ந்து தெரிவதற்கு  அவர் பங்களிப்பு  மட்டுமல்ல  நுண்ணுணர்வும் காரணம்.
நுண்ணுணர்வு என்பது  நம்மையும்  நம் சூழலையும்  தொடர்ந்து  கவனிப்பதால் உருவாகி  வரும்  குணம். நுண்ணுணர்வைப் புரிந்து  கொள்ள  அதற்கு  முற்றிலும்  எதிரான  குணமாக இன்னொன்றை புரிந்து  கொள்ள வேண்டுமென  நான் நினைக்கிறேன். அதற்கு  நான் இட்டிருக்கும்  பெயர் நுகர்வுணர்வு. நுகர்வு  கலாச்சாரம்  அதீத  நுகர்வு  போன்ற வார்த்தைகள்  புழக்கத்தில்  இருக்கின்றன. ஆனால்  நான்  நுகர்வினை (consumption) ஒரு உணர்வாகவே காண்கிறேன். சில  பத்தாண்டுகளுக்கு  முன்பு நிறைய பணம்  என்பது தந்தை வழியிலோ தாய் வழியிலோ பெறக்கூடிய  சொத்தாக மட்டுமே  இருந்தது. ஆனால்  எந்திரங்களின்  வளர்ச்சியும்  (குறிப்பாக  தானியங்கி  மற்றும்  மின்னனுவியல் ) உலக அளவிலான  தாராளமயமாக்கலும் குறிப்பிட்ட  எந்திரங்களையுளையும் கணிப்பொறிகளையும் சிறப்பாக  இயக்கினாலே குடும்பச்  சொத்தை விட அதிகமான பணத்தினை  நாற்பது வயதிற்குள்  அடைந்துவிடக் கூடிய  வாய்ப்பினை உருவாக்கின. கற்பனைக்கும் பங்களிப்புக்கும் எந்தவித முக்கியத்துவமும்  அளிக்காத  வறண்ட சூழலில்  வருமானத்தை  மட்டுமே  தகுதியின்  அளவுகோலாகக் காணும்   பெற்றோர்  மத்தியில்  வளர்வதால் நிறைய சம்பாதிப்பதற்கான வழியை  தேடிக்  கொள்வதில்  சிரமம்  இருப்பதில்லை. அதன்  பலனாய்  கிடைக்கும்  பணம்  எல்லையற்ற இன்பத்தை நல்கும்  என்ற நம்பிக்கை  அநேகரிடம் உண்டு. பசியோடு இருக்கும்  போது நிறைய சாப்பிட்டு  விடலாம்  என்ற வெறி எழுவது போல. இந்த இடத்தில்  தான்  நுகர்வுப்  பொருட்கள்  குவிகின்றன. விலையுயர்ந்த  நுகர்வுப்  பொருட்களை  உருவாக்குவதில் தான் உலகின்  அறிவும் திறனும்  பெரும்பாலும்  செலவழிகிறது என்பது என் தனிப்பட்ட  எண்ணம்.

ஏன்? குறிப்பிட்ட  அளவு  பணம்  சேர்ந்தவுடன்  இனி “வாழ்க்கையை  அனுபவிக்கலாம்” என்ற நோக்கத்தோடு  ஒருவன்  திரும்பும்  போது அவனுக்காக  நேர்த்தியான  விளையாட்டு  மைதானத்தின் பார்வையாளர்  இருக்கையும் உயர்தர  விடுதிகளின் வரவேற்பும்  சொகுசான வாகனங்களின்  அணிவகுப்பும் உயர்ந்த  மது வகைகளின் பளபளப்பும் ஆச்சரியமூட்டும் புதுப்புது  பொருட்களுடனான மின் சந்தையும்  எதிரே  விரிந்து  கிடக்கும். நுகர  நுகர  மேலும்  நுகர்வதற்கான  உத்வேகம்  பெருகும்.  இந்த உத்வேகத்தை அணைய  விடாமல்  பார்த்துக்  கொள்வது  மட்டுமே  வணிக  நிறுவனங்களின் வேலை. தன் நுண்ணுணர்வை சற்றேனும்  தீட்டிக்  கொள்பவர்கள்  தன்னுள்  பெருகியிருக்கும் நுகர்வுணர்வினை கண்டு  கொள்ள முடியும்  உடன் நுண்ணுணர்வு  மழுங்கி  இருப்பதையும். ஒரு செயலின் வழியாக  மகிழ்ச்சியை தேடுவது  நுண்ணுணர்வு. “பலனை” அடைய நினைப்பது  நுகர்வுணர்வு. கடவுள்  வரை இன்று  நுகர்வுப் பொருள்தான். இத்தனை மணிக்கு  “அப்பாயின்மென்ட்” இவ்வளவு  நேரம்  “தரிசனம்” செய்யக்கூடிய விதத்தில்  “பேக்கேஜாக” “கடவுள் வியாபார” நிறுவனங்களை நிறையவே  பார்க்க  முடிகிறது. இந்த “பொருள்” நுகர்வில்  திருப்தி  இழப்பவர்கள் அடுத்து  “லேண்ட்” ஆகும்  இடம் கடவுள். அது மீள்வதற்கு  வழி இல்லாத  துறை என்பதால்  அங்கே பெரும்பாலும்  தங்கி விடுகின்றனர். இறுதிவரை  உள்ளிருந்து  பிரச்சினையை  அணுக மட்டும்  நமக்கு  மனம்  வருவதே இல்லை. அனைவருக்கும்  தெரிந்தால்  எனக்கும்  தெரிய வேண்டும் .அனைவரும்  சிரித்தால் நானும்  சிரிக்க  வேண்டும்  என்கிற  ரீதியில்  “மந்தை” மனநிலையை  வளர்த்துக்  கொள்ளும்  போது நுண்ணுணர்வு  அழிகிறது. நம் நுண்ணுணர்வு  குறைந்திருப்பதை இப்போது  வரும்  நகைச்சுவை  காட்சிகளைக் கொண்டே புரிந்து  கொள்ள முடியும். உடல்மொழியும் நுணுக்கமான  வார்த்தை பிரயோகங்களும் இன்றி  பட்டிமன்ற  பேச்சாளர்கள்  போல நம் நகைச்சுவை  நடிகர்கள் ஏதோ உளறிக்  கொட்டுகிறார்கள். அது நகைச்சுவை  தானா  என்ற சந்தேகம்  வரக் கூடாது  என்பதற்காக  நம் தொலைக்காட்சிகளில்  நகைச்சுவைக்கென தனியே  சேனல் வேறு . அதில்  எதைக் காட்டினாலும் “கெக்கபிக்க” என நாம் சிரித்தாக வேண்டும். அரசியல்  கட்சிகளின்  கூட்டங்களிலும் எங்கு கைதட்ட வேண்டும்  என்ற அறிவு கூட இல்லாமல்  சாராயத்தை  குடித்துவிட்டு  அமர்ந்திருக்கிறோம். தன்னைக் குறித்து  கறாரான  சுய மதிப்பீட்டை  உருவாக்கிக்  கொள்பவர்கள் “மந்தைகளில்” ஒருவராகாமல் தடுத்துக்  கொள்ள முடியும்.

இன்னும்  சொல்வதானால் நுண்ணுணர்வையும் நுகர்வுணர்வையும் இப்படி வேறுபடுத்தலாம். காதல்  இயல்பாக  கொண்டு  சென்று நிறுத்தும்  புணர்விற்கும் காசு கொடுத்துப் புணர்வதற்கும் உள்ள வேறுபாடு. 

No comments:

Post a Comment