Sunday 15 January 2017

அனுதாபம்

முதலில் தவறெனத் தோன்றியது. ஆனால் தவறுகள் மட்டுமே அளிக்கும் ஒரு கிளர்ச்சி உண்டு. மிகப்பெரிய எதிரான மீறல்களை நிகழ்த்தும் போது மட்டும் மனம் சென்று விழும் விசை மிக்க நதியொன்று உண்டு. கடிவாளம் மீறித் திமிரும் அம்மனம் அச்சமென ஒழுக்கம் என அறம் என போடும் வேடங்களை ஒரு தேர்ந்த கவர்ச்சியான திறன் மிகுந்த தொழில் முறை வேசியாலும் மிஞ்சி விட முடியாது. எழுதாமல் இருக்க முடியவில்லை.

ஒருவேளை அனு அந்த மீறலே உன்னை நோக்கி என்னைத் தூண்டியதா? ஆறு வருடங்கள் நான் அவனை நேசிக்கிறேன் என என்னிடம் நீ சொன்னது வெறும் எண் தானடி. இரண்டாயிரத்து சொச்சம் நாட்கள் ஒருவனை விரும்பினேன் என நீ சொன்னபோதே முடிவு செய்துவிட்டேன் நீ தேர்ந்த நடிகை அல்லது ஏமாளி அல்லது பசப்புகாரி என. இம்மூன்றில் எத்தகைய குணம் ஒரு பெண்ணிடம் இருந்தாலும் அவளைக் கையாள்வது அத்தனை சுலபம் என் கண்மணியே. ஆனால் அத்தனைக்கும் முன்னால் ஒன்றுண்டு. அது பரிசுத்தமான பொறாமை. எனக்கு நடக்கவில்லை அல்லது என்னால் அடையமுடியவில்லை என்று ஏங்கும் தூய்மையான ஆங்காரம். அன்பே அதன்முன் எதுவுமே நிற்க முடியாது. என்னை உலுக்கி உலுக்கி உன்னை நோக்கித் தள்ளியது உன் தெளிவு தானடி. இத்தனை தெளிவும் துணிவும் எவ்வுயிருக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல. எப்படி எல்லாமோ உன்னை நெருங்கினேன். சூழ்ந்தேன். ஆனால் நீ ஆறு வருடங்கள் ஒருவனை உருகி விரும்புவதை கண்ணீர் மின்ன என்னிடம் ஒப்புவித்த போது ஓங்கி அறையும் ஒரு எண்ணம் எழுந்தது. ஆனால் அடுத்த நொடியே இயல்படைந்தேன். உன் அத்தனை தெளிவுகளும் நீ கட்டமைத்தவை. உன் வேடங்கள். உன் ஆழ்மனக் குளத்திற்கு மேலே ஒரு அழகான பாலிதீன் கவரை விரித்து வைத்திருக்கிறாய். அதிலிருக்கும் மெல்லிய விரிசல் வழியே உன் மனக் குளிர்ச்சியை அறிந்து கொண்டிருப்பவன் நீ ஆறு வருடங்கள் காதலிப்பதாக நம்பும் அந்த அப்பாவி. அவ்விரிசலை அவனே முழுதும் அடைத்திருப்பதால் உன் கவர் பரப்பை அனைவரும் உண்மையென நம்பி விடுகின்றனர். தோழி நான் அந்த கவரில் துளியிட்டு உன் மனம் நுழைய விரும்பும் மீனல்ல. அதனை மேன்மையான கொடூரத்துடன் கிழித்தெரிய எழுந்தவன்.

நீ ஒவ்வொரு முறை பலகீனமாக உணரும் போதும் உன் ஆறு வருடக் காதலை மார்புக் கவசமாக மாட்டிக் கொள்கிறாய். இவ்வருடங்களில் ஒரு முறை மட்டுமே அவன் உன்னை புணர்ந்ததாக நீ சொன்ன போது அதன் அடியில் மின்னிய மெல்லிய மிக மெல்லிய மிக மிக மெல்லிய ஏமாற்றத்தை என்னுள் இருக்கும் நானே வெறுக்கும் ஒரு கீழானவன் கண்டு கொண்டான். ஆனால் என் அணுக்கத்தினளே நீ அறிவாயா நீ என்னிடம் மிக விரும்பியது அக்கீழானவனையே என. ஆம் என் ஆருயிரே என்னை மிக விரும்புவதற்கும் மிக வெறுப்பதற்கும் எப்போதும் காரணமாய் நிற்பது அந்த கீழ்மையே. அதனை கைவிடு கைவிடு என தனிமையில் கதறியிருக்கிறேன். என்னை நானே வதைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னவளே நானே அஞ்சும் வகையில் அக்குணம் பிறரை ஈர்க்கிறது. அனு நீ அவன் குறித்து சொல்லிய ஒவ்வொரு சொல்லும் சதையில் கொட்டிய ஈயமென உருகிக் குழிந்து விட்டதடி.

மலங்க விழித்தபடி "ஹலோ அருண்" என அவனை அழைத்த உன் குரலுக்காக அந்த முகத்திற்காக அந்த கபடின்மைக்காக அந்த படபடப்பிற்காக அப்போது உன் உதட்டில் பூத்த வியர்வைக்காக உன் நெஞ்சில் ஏறிய துடிப்பிற்காக உன் உள்ளே பரவிய பரவசத்திற்காக அச்சத்திற்காக  ஆயிரம் முறை இறப்பேன். அதை எதிர் நின்று ஏற்ற அல்லது ஏற்கத் தெரியாத அவனை கோடி முறைக் கொல்வேன். மலரும் சூரியனை ஏற்கும் கடலடிவானென நானிருக்க ஏனடி உன் கதிர்களை முழுதாய் ஏற்றுச் சிவக்கத் தெரியாத அடர்காட்டில் மலர்ந்தாய். அய்யோ! அந்நொடிக்கென எத்தனை முறை இறந்து எத்தனை முறை நான் பிறப்பது. ஆடையற்ற உன் மழலைப் படத்தை என்னிடம் காண்பித்தாய். அந்த உடல் முழுதும் முத்தமிடும் அன்பே என்னுள் எழுந்தது. சென்ற வாரம் எடுக்கப்பட்ட இன்னொரு படத்தை காண்பித்தாய். அரை விழி கனத்து சரிந்திருந்த படமது. அப்படியே உன்னை அள்ளித்தூக்கி அனைத்து இறுக்கி இருப்பவை இரு உடல்கள் என்ற எண்ணமே அற்றுப் போக ஒட்டிக் கொள்ளும் வெறி எழுந்தது. ஆனால் என் சின்னஞ்சிறு பிரபஞ்சமே நீ கனிந்து நின்ற கணத்தில் கண்டிருக்கிறாய் அவனை. உன் மழலையும் மதர்ப்பும் முட்டித் தழுவிய உடல் பெண்மையும் பேதைமையும் ஒட்டிப் பிணைந்து உருகி வழிந்த கணங்களது.

அனு

அனு

அனு

அனு...

நீயே நினைத்தாலும் அக்கணத்தை எனக்கு கொடுத்து விட முடியுமா? முடியாதடி. இனியது முடியவே முடியாது. இனிப்பு பிடுங்கப்பட்ட குழந்தையென ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்தில் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்ட ஓட்டக்காரனென ஒற்றை மகனை இழந்த தந்தையென உறவுகள் இன்றி இருக்கும் கிழவனென என் மனம் கொள்ளும் பெரு வேதனையை உன்னால் புரிந்து கொள்ள முடியும். உன்னால் மாற்றியிருக்கவும் முடியும். ஆனால் என் கண்மனியே அக்காலம் முடிந்து விட்டது. உன்னில் ஊறிய அமிர்தத்தின் முதல் துளியை அவன் முன் வைத்து விட்டாய்.

முட்டாள். உன்னிலும் கீழான முட்டாள் முட்டாள் இவ்வுலகில் இருக்க முடியுமா! பேதை. பெரும் பேதை. நக்கித் தின்ன மட்டுமே தெரிந்தவனுக்கு அளிக்க வேண்டியது உணவல்லடி. ஊன். எல்லா உணவும் ஊன் தான் என்கிறாய். பின் எதற்கு சமைத்தல்.

"அயம் அனுராதா. பர்ஸ்ட் இயர் ஈசிஈ" என்று பல் இளித்திருக்கிறாய்.

பழிகாரி அதற்கெனவே உன்னை ஆயிரம் முறை வெட்டுவேன். உன்னை அறியவில்லையா நீ? உன்னுள் அத்தருணத்தில் எழுந்த காதலை உணர்ந்திருந்தாள் இன்றுவரை அந்த மடையனுடன் இருக்க மாட்டாய். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் கொண்டாடி வளர்த்த பேருணர்வடி அது. அது இறை. அது இன்மை. அது இனிமை. அது இவையனைத்தும். அதுவன்றி இங்கு எதுவுமே இல்லை. கருணை என்றனர் சிலர் அதை. கடவுள் என்றனர். தர்மம் என்றனர் அறம் என்றனர். அத்தனை மேன்மைகளும் ஒன்றிணைந்து உருகிச் சொட்டிய துளியை நாய் கண்ணோரம் விழுந்த நீர்த்துளியை புறங்காலால் துடைத்தெறிவது போல துடைத்தெறிந்து அவன் சொல்லி இருக்கிறான் "பர்ஸ்ட் இயரா? இந்த ரெக்கார்ட் நோட் நாளைக்கு சம்மிட் பண்ணனும். பினிஷ் இட் அண்ட் கிவ் இட் இன் த மானிங்."

சீ கேடுகெட்டவளே. நீயெல்லாம் செத்துப் போகலாம். அடிமையாய் இருப்பதற்கென்றே பரிணாமம் நிமிர்த்திய முதுகை கூனிக் கொள்ளும் வீணனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம். மகத்தானவளாக எழுந்திருக்க வேண்டாமா? உன் கேடு கெட்ட ஒழுக்கமும் உன் எலிப் பொந்து வீட்டு வாழ்க்கையும் உன்னைத் தடுத்ததா? பேதையே! அத்தனை ஆணும் பெண்ணை உள்ளூர அஞ்சுபவனே. அந்த அச்சத்தை அவன் முன் சமர்ப்பிக்காது இங்கு வீரனென ஒருவனும் எழுந்து விட முடியாது. அவனை உருகிக் காதலித்தாலாம். அவனை முதலில் பார்த்த நாள் அவனிடம் காதலை சொல்லிய நாள் அவனுடன் படுத்த நாளென அனைத்தையும் குறித்து வைத்திருக்கிறாய். அறிவில்லையா உனக்கு? ஆதவி அவள் ஒளியூட்டிய இவ்வுலகை குனிந்து தான் பார்ப்பாள். மண்ணுக்கடியில் நுழைந்து அண்ணாந்து பார்க்க மாட்டாள்.

நீ அவனிடம் காதலைச் சொன்ன அக்கணம். நான் எண்ணி எண்ணி சிரிக்கும் கசப்பான நகைச்சுவை நாடகத் தருணம் அது.

அவன் "அனும்மா."

அவன் அப்படி அழைத்த மிறட்சியுட்ன் நீ "ம்."

அவன் சிறுநீர் கழிக்க ஆசிரியையிடம் அனுமதி பெறும் சிறுவனின் தொணியுடன் "ஐ கேன்ட் கன்ட்ரோல் அனு. ஐ லவ் யு."

உன் கண்களில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறான் தேர்ந்த வேசியை அலற மெய்யாக அலற வைக்கும் உத்வேகத்துடன். என் செல்ல மடச்சியின் முகத்தில் மாறுதல் இல்லை. அன்றிலிருந்து இன்று வரை பெண்ணை ஈர்த்திழுக்கும் ஆணின் இறுதி ஆயுதம் தன்னிரக்கம். அதை எடுக்கிறான்.

"அனு நீ இப்பவே ஓகே சொல்ல வேண்டாம்" என்றவன் சற்று நேரம் கழித்து முகத்தை முடிந்த மட்டும் சுருக்கிக் கொண்டு "சரி எப்பவுமே சொல்ல வேண்டாம். ஆனா இந்த செகண்ட் என்னோட லைப் முடிஞ்சது. உங்கிட்ட லவ்வ சொன்னது என்னோட பெஸ்ட் மொமண்ட். அது போதும் அனு" என்றவனின் விழிகளில் சில நீர்த்துளிகளை பார்த்துவிட்டாய்.

அனு அழுது அடம்பிடித்து அம்மாவிடம் இனிப்பு வாங்கித் தின்னும் எளிய குழந்தையின் கண்ணீர் அது. கண்ணீரைக் காணாமல் வளர்ந்தவளே நீ இரங்க அதுவே போதுமானதாய் இருந்திருக்கிறது. எது வேண்டுமானாலும் சொல் அவன் மேல் உனக்குப் பிறந்தது இரக்கம். அதை கெஞ்சிக் கெஞ்சி கொஞ்சிக் கொஞ்சி மிஞ்சி மிஞ்சி உன்னை காதலென நம்ப வைத்திருக்கிறான். பாவம் அவனும் அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறான்.

"அருண் ஐ லவ் யூ" என்று நீ சொன்னதே உன்னையும் அறியாமல் நீ சொன்ன மிகப்பெரிய பொய்.

என் சிறுமியே அறிய முடிகிறதா உன்னால் நீ இழந்ததென்னவென்று? 

அடைய முடியாதவற்றால் அடைத்துக் கிடக்கிறது என் இறந்தகாலம்.

அடியேய் உனக்கும் அப்படித்தான். எல்லாம் அடைந்து விட்டேன் பெருங்காதலை உணர்ந்து கொண்டேன் என மீண்டும் பசப்பாதே. நீயும் அறிவாய் நீ இழந்ததென்னவென்று.

அனு நீ இழந்தது சீண்டலை. அவமானத்தை. பெருந்துயரை. தற்கொலை செய்து கொள்ளும் வெறியை. புறக்கணிப்பை. ஏளனத்தை. பயத்தை. வெற்றியை. பெருங்காமத்தை. தவிப்பை. ஒன்றும் செய்ய முடியாமையை. வெறுப்பை. வெறுத்தால் மட்டுமே அடையக்கூடிய மகத்தான புரிதலை. அப்புரிதலால் மட்டுமே தொடக்கூடிய ஆணின் ஆழத்தை. அதன் வழியே அவன் ஆணவத்தை. அந்த ஆணவத்தை இறுகப் பற்றி இருக்கும் அவன் ஆளுமையை. அவ்வாளுமையால் அவன் அடைந்த அன்பை. அதுவே உன்னில் பெருக்கெடுத்திருக்கும் பேரன்பென.

தோழி நீ அறியவேயில்லை. பொருட்களும் நேரமும் அல்ல அன்பை வெளிப்படுத்தும் வழி. பொருட்படுத்தாமையே அன்பு. எந்நேரமும் உன்னையே எண்ணிக்கொண்டு உன்னிடம் அதை சொல்லத் தயங்கி ஒவ்வொரு பார்வையிலும் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு செயலிலும் அந்த அக்கறையின் அன்பின் பதற்றத்தின் களிம்பினை பூசிவிட்டு விடும் செயலின்மையே பெருங்காதலடி என் உயிர்த்தோழி.

இத்தனை சொற்களும் உனக்கல்ல. எனக்கு.

எத்தனை மகத்தானவள் நீ. மகத்தானவை மட்டுமே மட்டமானவற்றை தேர்ந்தெடுக்கின்றன.

அவனுடைய விந்தினைப் பெற்று ஒரு சதைத்திரளை உலகில் உலவ விடுவாய்.

உன் விழிகளின் தடுமாற்றங்களை உன் முக மாற்றங்களை உன் மென் குறும்புச் சிரிப்பை கல்லென முகமிருகும் உன் ஆழமறிய முடியாப் பெருங்கோபத்தை எரித்து விடும் மூச்சின் பெருந்தாபத்தை நிமிர்ந்து விழி நோக்கும் உன் கம்பீரத்தை விழி சரிய நிலம் நோக்கும் உன் நாணத்தை அவன் அறியவே போவதில்லை.

உன் அத்தனை அழகுகளும் அழகின்மைகளும் அடர்ந்து மண்டிய காடடி என் ஆழ்மனம்.

அங்கொரு புழுவென புதர் மிருகமென மீனென மானனெ சிம்மமென வேங்கையென தென்றலென புயலென மழையென இரவென மணமென மந்தகாசமென நிறைந்து கிடக்கிறாயடி என் பெருந்தேவி.

நான் உன்னை வாழ்த்தப் போவதில்லை. என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

No comments:

Post a Comment