Tuesday 8 August 2017

ஒரு பழைய ஓட்டு வீட்டின் கதை

ஒரு பழைய ஓட்டு வீட்டின் கதை வெளியில் இருந்து சொல்லப்படும் போது ஆர்வமூட்டுவதாக இருக்கலாம். அதன் தோற்றத்தையும் வீழ்ச்சியையும் சரியான வார்த்தைகளில் படம் பிடித்து நிறைவோ துயரோ வேண்டிய அளவு உணர்ச்சிகளை ஊட்டலாம். ஆனால் ஒரு பழைய ஓட்டு வீட்டின் கதையை அவ்வீடு புதிதாக இருந்த போது அங்கு வளர்ந்த ஒருவனின் சொற்களில் அதுவும் அவ்வீட்டுக்குள் இருந்தே வெளிவரும் அவன் சொற்களில் கேட்பது சற்றே சங்கடம் தருவதாக இருக்கலாம். வெளியே அடர்த்தியாக மழை பெய்கிறது. இவ்வீடு ஒரு கிழ நாயைப் போல மழைக்கு அஞ்சி நெளிகிறது. இதை உங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பவன் அவ்வீட்டுக்குள் கிடந்த நெளிகிறான். உங்கள் கட்டிடங்களை அவை கட்டிடங்கள் என்ற உணர்வு எழும் முன் இடித்துவிடுங்கள் என்பது அவன் சொல்லும் போதனையாக இருக்கலாம். ஏனெனில் அவன் இப்போது ஒரு கட்டிடத்தில் இருக்கிறான். அவன் இந்த கட்டிடத்துக்கு எப்போது வந்தான் எனத் தெரியவில்லை. ஆனால் அவன் வீட்டை விட்டே சென்றிருந்தான். திரும்பி வருகையில் அந்த வீட்டில் கொஞ்சம் வீடும் அவன் அம்மாவில் கொஞ்சம் அம்மாவும் அவன் மனைவியில் கொஞ்சம் மனைவியும் எஞ்சி இருப்பார்கள் என அவனுக்கொரு நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கைக்கு ஆதாரமாய் அந்த வீட்டைத் தவிர வேறெதையும் அவன் செல்லும் போது விட்டுச் செல்லவில்லை. அவன் அந்த வீட்டுக்கு திரும்பி வந்தது ஊரில் யாருக்குமே தெரியவில்லை. ஊரை விட்டு இப்போது அவன் வீடு தள்ளியிருக்கிறது. அவன் வீட்டுக்கு அருகில் இருந்த எந்த வீட்டிலும் இப்போது ஆட்கள் இல்லை. மேலு‌ம் அவை வீடாகவும் இருக்கவில்லை. இடிந்து நைந்து வரப்போகும் பெருமழையில் கரையக் காத்திருந்தன. இவன் வீடு அப்படியில்லை. சிக்கலான நோய்கள் கொண்டவனைப் போல அவன் வீடு மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அது வீடாக இருந்த நாட்கள் அவன் நினைவுக்கு வருகின்றன.

எல்லாவற்றையும் துல்லியமாக நினைவுகூர அவன் விரும்பவில்லை. அவனால் அது முடியவும் இல்லை. அவன் விரும்பினால் இன்னும் கொஞ்ச காலம் உயிரோடு இருக்கலாம் என்பதைப் போலவே அவன் விரும்பினால் பல நினைவுகளை அவ்வீடு குறித்து மீட்டெடுக்க முடியும்.

அவன் அம்மா அவ்வளவு சந்தோஷமாக சாப்பாடு பரிமாறிய தினம் அவனுக்கு ஞாபகம் வந்தது. அது இந்த வீடு கட்டி முடித்து பால் காய்ச்சப்பட்ட தினம். அவள் முகத்தில் அன்றிருந்த சீற்றமும் பெருமிதமும் இன்று நினைத்தாலும் மனம் பொங்க வைக்கின்றன. அடுத்த நாளில் எந்த வெற்றியும் இருந்ததாக அவள் நம்பவில்லை. சிறு அலட்சியங்களை அவமானங்கள் என்றும் எண்ணியது அதே செறிவுடன் நடக்காதது தோல்வி என்றும் அவள் கற்பனை செய்தாள். எந்நேரமும் தொடுக்கப்பட்ட அம்பு போலவே இருந்தாள். அந்த வீடும் அப்படித்தான் இருந்தது. அதுவரை அவன் அம்மாவின் உடலில் தெரிந்த தயக்கம் இல்லாமல் ஆவதை அவன் கண்டான். திண்ணையில் நின்று அனைத்திற்கும் தீர்க்கமாக பதில் சொன்னாள். அப்பாவை "இங்க வாங்க" என சத்தமாக அழைத்தாள். சாலையில் நடந்து செல்கிறவர்களை அலட்சியம் மின்னும் விழிகளால் பார்த்தாள். தன் மதிப்பை யாரேனும் குறைக்க வேண்டும் என்ற ஆசை அவளிடம் எப்போதும் இருந்தது. அதன் வழியே அவர்களை பற்றிப் படர்ந்து படம் விரிக்க நினைக்கும் அவளுடைய ஆவலை அனைவரும் அஞ்சினர்.

அப்பா அந்த வீட்டுக்கு வந்த பிறகு எந்நேரமும் இருக்கும் பதற்றம் குறைந்தவர் ஆனார். செய்தித்தாள்களை விரித்துப் பிடித்து அரைமணி நேரத்திற்கும் மேலாக வாசிக்கும் அப்பாவை பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மாவை அடிப்பதோ கெட்டவார்த்தைகளில் திட்டுவதோ கிடையாது. வீட்டுக்கு வரும் யாரையும் எதையும் உண்ண வைக்காமல் அனுப்புவதில்லை அவர். சத்தமாக சிரிக்கிறார் கூர்மையாக அனைத்தையும் கவனிக்கிறார்.

அவன் மாறிப்போகவே செய்தான். முதலில் வீட்டருகில் யாரும் இல்லாதது வருத்தம் தருவதாய் இருந்தது. ஆனால் அவன் வீட்டுக்கு அடுத்து விரியும் திடலில் தான் பசங்கள் விளையாட வருகிறார்கள். அதனால் இயல்பாகவே அவன் எல்லா விளையாட்டிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். விளையாட்டுச் சாமான்கள் எல்லாமும் அந்த வீட்டிலேயே வைத்துச் செல்லப்பட்டன. அவன் வீட்டுக்கு அருகில் சில வீடுகளும் கட்டப்பட்டன. இருந்தும் அவன் வீட்டின் தனிமை அப்படியே அசைக்கப்படாமல் இருந்தது. அந்த வீட்டில் தான் ரம்யா சித்தி ஒருமுறை பாத்திரம் கழுவ வந்தவள் வீட்டுக்குள் டி.வி பார்த்துக் கொண்டிருந்தவனை பிடித்து உடலோடு அணைத்து உதடுகளில் இறுக்கமாக முத்தமிட்ட பின் அழுது கொண்டே ஓடினாள். செல்வி அக்காவுக்கு அந்த வீட்டில் தான் குழந்தை பிறந்தது. சுமதியை முதன்முறையாக அவன் முத்தமிட்டதும் அங்குதான். நண்பர்களுடன் இணைந்தமர்ந்து கைகள் நடுங்க முதன்முறையாக மது அருத்தியதும் அங்குதான்.

வெளியூருக்கு படிக்கச் சென்ற போது அந்த வீட்டை மட்டுமே மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டான். நண்பர்களின் வீடுகளை பார்க்கும் போதெல்லாம் தன் வீட்டுடன் அதை ஒப்பிட்டு பெருமையோ சிறுமையோ அடைந்தான். படித்து முடித்த பின் காயத்ரியை கூட்டிவந்தபோது அவன் எவ்வளவோ மறுத்தும் அவள் அவனை தன்னுடன் முதன்முறை இணைத்துக் கொண்டதும் இந்த கூடத்தில் தான். அவளை மணமுடித்ததில் அப்பாவுக்கு வருத்தம் இருந்தது. மாரடைப்பில் இறந்து போனார். அதன்பிறகும் அவன் வீடு நன்றாகவே இருந்தது. காயத்ரியின் உறவினர்கள் அம்மாவின் உறவினர்கள் அவனுடைய மகன் மகள் என வீடு எந்நேரமும் சத்தமாகவே இருந்தது. அவனும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்கு வந்துவிடும் வேலையிலேயே இருந்தான். அவனுக்கு எங்கோ ஒரு மூலையில் சலிப்பு தட்டியிருக்க வேண்டும். காயத்ரியை தவிர்க்கத் தொடங்கினான். அவளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் யாருடனும் பேசாமல் ஆனான். குழந்தைகளை கொஞ்சுவதும் குறைந்து போனது. சரியாக வேலைக்குச் செல்வதில்லை. குடும்பம் நொடிக்கத் தொடங்கியது. எப்போதேனும் அவளைக்கூடும் போது அவளுடைய குழி விழுந்த கன்னங்களையும் சுள்ளி போன்று மாறியிருந்த கைகளையும் கண்டு வெறி கொண்டு அடிக்கத் தொடங்கினான். அவள் கைகளை முகத்துக்கு நேரே நீட்டிக் கொண்டு அழுவது மேலு‌ம் வெறுப்பைக் கொடுத்தது.

குழந்தைகள் உண்ணாமல் மெலிந்து கொண்டே வந்தன. அதை நினைத்தும் எரிச்சல் கொண்டான். அவன் எதை நினைத்து எரிந்தாலும் காயத்ரியை அணைத்துக் கொண்டான். குழந்தைகள் பார்க்கவே அவள் கெஞ்சுவதையும் பொருட்படுத்தாமல் உள்ளே இழுத்துச் சென்றான். கொஞ்ச நேரத்தில் அழுதபடி ஓடிவரும் அம்மாவுக்காக குழந்தைகள் காத்திருக்கத் தொடங்கின. ஒரு இறந்த குழந்தையை ஈன்றாள்.

மகனுக்கு மார்புச்சளி முற்றி வைத்தியம் பார்க்க பணமில்லாமல் ஆனபோது அவன் வீட்டை விட்டு ஓடிவிட்டான். பிச்சை எடுத்தான். ஓரினச்சேர்க்கை மூலம் அவனுக்கு கொஞ்ச நாள் பணம் கிடைத்தது.

"என் பிறப்புக்கு முந்தைய கணத்தை என்னால் ஊடுருவிப் பார்க்க முடிகிறது. எனக்கு அம்மா இருந்தாள். எனக்கு இரு அழகான குழந்தைகளும் ஒரு அற்புதமான மனைவியும் இருந்தார்கள். எங்களுக்கு அழகான ஒரு ஓட்டு வீடு இருந்தது. நாங்கள் ரொம்பவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்தோம்" என அவன் தன் பூர்வ ஜென்ம நினைவுகளாய் தன் குடும்பத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான். கண்கள் வெளித்தள்ளிய அந்த எலும்புருவுக்கு அப்படியொரு வாழ்க்கை இருந்திருக்கும் என யாரும் நம்பவில்லை.

அவன் மெல்ல மெல்ல அந்த வாழ்க்கைக்கு பழகிக் கொண்டான். கண்டதை தின்றும் கண்ட இடத்தில் உறங்கியும் அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவன் உடலும் தேறியது. அவனுக்கு பெண்களும் எளிதாக கிடைத்தனர். எல்லா ஆறுகளிலும் மூழ்கி எழுந்தான். அவன் ஊர் என்ற போதம் இல்லாமலேயே அவன் ஊர் ஆற்றில் முழுகி எழுந்தான். எப்போதும் போராடி நீந்தும் அவன் உடல் அவ்வாற்றில் எளிதாக நீந்தியது. அவன் ஊரும் வீடும் அவனுக்கு நினைவுக்கு வந்தன. அதுவரை உடலில் இருந்த சமநிலையும் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் காணாமல் ஆனது. நோயுற்றவன் போல அவன் முகம் இருண்டது. அவன் வீட்டை அவன் அடைந்த போது இருட்டிவிட்டிருந்தது.

வீட்டுக்கு கதவுகள் இல்லை. எறும்புகள் வீடு முழுக்க மண் அரித்து வைத்திருந்தன. பொருட்கள் என அவ்வீட்டில் ஏதுமில்லாதது அவனுக்கு நிம்மதியைக் கொடுத்தது. அடுத்த நிமிடமே பயம் வந்து மனதைக் கவ்வியத். பல கட்டுவிரியன் பாம்புகள் அவனைச் சுற்றி நெளிந்து கொண்டிருந்தன. அவனளவு நீளமும் அவன் கையளவு கனமும் கொண்ட நிறைய பாம்புகள்.

சமையற்கட்டின் மேல் பிணைந்து கிடந்த பாம்புகளை அகற்றிவிட்டு அக்கட்டையின் மேல் படுத்துக் கொண்டான். அவனுடைய துணிப்பையில் இருந்த கம்பளியை எடுத்துப் போர்த்திக் கொண்டான். பின்னர் அப்பையில் இருந்த எல்லா உடைகளையும் எடுத்துப் போர்த்திக் கொண்டான். நன்றாக மழை பெய்யத் தொடங்கியது. அந்த குளிரை அனுபவித்தபடியே கிடந்தான். அவன் படுத்திருந்த மேடையின் மழை ஒழுகவில்லை.

மனம் எப்போதும் அஞ்சித் தயங்கும் அந்தப்புள்ளியை இந்த உடற்சுகநிலை அசைபோடத் தொடங்கியது. ஒருவேளை அவன் காயத்ரியை வெறுக்காமல் இருந்திருந்தால். அம்மாவையும் குழந்தைகளையும் பிரியாமல் இருந்திருந்தால். போர்த்தி மூடி தூங்கும் அவனை அவள் மகள் ஒவ்வொரு போர்வையாக இழுத்து எழுப்புகிறாள். அவன் மகன் அவன் மேல் ஏறிக்குதிக்கிறான். குளித்த ஈரம் சொட்டும் தலையுடன் உடைமாற்றும் காயத்ரியின் உடல் மணம் மனதை கிளரச் செய்கிறது. அம்மா ஒருக்கி வைத்திருக்கும் பூஜை அறையினுள் நன்றாக குளித்து உடையணிந்தபடியே போய் அவனும் காயத்ரியும் பிள்ளைகளும் போய் நிற்கின்றனர். அவள் அவர்கள் நால்வருக்கும் விபூதி பூசி விடுகிறாள். கணவனை நினைத்து கலங்கும் அவள் கண்களை துடைத்துவிட்டு அணைத்தபடி அழைத்துச் செல்கிறாள் காயத்ரி. பாட்டி அழுவதற்கான காரணத்தை கேட்கும் குழந்தைகளை திசைமாற்றி அவன் வேறு பக்கம் அழைத்துச் செல்கிறான். அவன் கண்களும் பனிக்கின்றன.

ஆனால் அதை அவன் துடைத்த போது அவனை எழுப்ப ஆள் இல்லை. மழையில் நனைந்த பாம்புகள் உடற்சூடு தேடி ஊர்ந்து கொண்டிருந்தன. அந்த வீடு மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தது. பாம்புகள் உடற்சூட்டினை கண்டு கொண்டன. அவற்றை அணைத்துக் கொண்டான். கடைசியாக அடித்த மின்னலில் அந்த வீட்டின் சிவப்பான ஓடுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.

No comments:

Post a Comment