Sunday 11 February 2018

பரிசுப்பொருள் - ஒரு கடிதம்

அன்புள்ள சுரேஷ்,

நீங்கள் எழுதிய பரிசுப்பொருள் சிறுகதையை காலச்சுவடு இதழில் வாசித்தேன். முதல்   வாசிப்பில் மனமொன்றி மகிழ்ந்து மேலும்  இருமுறை வாசித்தேன். மீள் வாசிப்பில் கதை மேலும் துலங்கி வந்தது. தான் பயன்படுத்தப்படுகிறோம் என்று தெரிந்திருந்தும் தன்னைப்  பொருட்படுத்துகிறான்  என்பதாலேயே அவனிடம் தன்னை இழக்கும்  பெண் என்ற கதைக்கரு பழையதுதான் என்றாலும் மொந்தை சிறப்பாக இருந்தது.

மோனிகாவின் பின்னணியும், பிரபாகரனுடனான அவளது உறவும் கதையில் நெய்யப்பட்டுள்ள விதம் சிறப்பு - சிவக்குமாரை சந்தித்த இருமுறையும் கருப்பு சுடிதார், இருப்பதே 2-3, செவிலிப் பணிக்குச் செல்லும்போது அணிவது, நோயாளிகள் உடன் வரும் ஆண்கள் தொல்லை, உடைகள் தீட்டுதுணி போல, அம்மாவுடன் ஆன பேச்சு, குடிகார அப்பாவின் எதிர்வினை என்று இயல்பாக விவரிப்பு நிகழ குடும்பம் அவள் வருமானத்தை நம்பி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லி இருகிறீர்கள்.

அப்படியே பேருந்து, இரு சக்கர வாகனம் வாங்க சேர்க்கும் பணம் குடும்ப செலவுகளில் கரைந்து போவது என்று இயல்பாக தொடர்ந்து பணம் கேட்டு வரும் பிரபாகரன் தம்பி மூலம் பிரபாகரனைத் தொடுகிறது.

மோனிகாவைப் பூக்க வைக்கும் முத்தம், கனிவும் உடல் மணமும் ஏற்படுத்தும் குழப்பம், முதல் புணர்வு, காதல் போய் உடல்சுகத்துக்காகவே உபயோகிக்கப்படுவது, இறுதியில் கருப்பையை விலையாகக் கொடுத்து மீள்வது என இயல்பாக வளர்கிறது கதை.

இந்த இயல்புத்தன்மை என்னை .ஈர்த்தது.  அந்த இயல்புத் தன்மையின் கீழ் இன்னொரு ஓட்டம் இரண்டாம் வாசிப்பில் தெரிந்தது.

சிவகுமாருடன் பேசுவதை பார்க்கும் ஊரார் எதிர்வினைகள் பற்றிய இடம் முதல் வாசிப்பில் அதிகமாகத் தோன்றியது. இரண்டாம் வாசிப்பில்தான் அந்த விவரிப்பு மற்றும் அதையொட்டி வந்த “ அதைப் பற்றிய கவலைகள் தனக்கில்லை என எண்ணிக்கொண்டாள்” என்ற சொற்றொடரின் பொருள் துலங்கியது. (அவள் மணவாழ்க்கையை இழந்துவிட்டாள்).

“அதற்கெனவே நின்றிருந்தது போன்ற ஃபார்ச்சூனர்” வரியும் முதல் வாசிப்பில் அதிகமாகத் தோன்றியது. இரண்டாம் வாசிப்பில் அடுத்த வரியில் ‘பரிசுப்பொருளை’ எடுத்துச் செல்வதற்காகவே வந்த சிவகுமாருடன் இணந்துகொண்டது. ஃபார்ச்சூனர் காரின் பெயர் கூட குறியீடோ?

தீபாவளி சமயம் கதை நிகழ்வதுகூட மோனிகாவின் ஒரு கேள்வியிலும் பட்டாசு வெடிப்பதிலும் கதைபோக்கின் ஊடாகவே சொல்லப்பட்டுள்ளது.

“உடை போல, எப்படி தன்னை கையாண்டாலும், அவன் கற்பனைகளுக்குத் தன் உடலில் இடமளிக்கத் தொடங்கினாள்” என்று மிகக் குறைந்த சொற்களில் மோனிகாவின் பாலியல் இழிவை உணர்த்தியுள்ளீர்கள்.

மிகவும் ரசித்த வருணனை - “ ஒரு செல்லச் சொல்போல விழிகளுக்குக் கிழே ஒரு முடிக்கற்றை தொங்கிக்கிடந்தது.” செல்லச் சொற்கள் எல்லாம்  கன்னத்தில் இடும் மென் முத்தங்கள் என்று தோன்றியது. “இடக்கையின் நடுவிரல் மோதிர விரல்களால் அச்சொல்லைக் கோதித் தலைகேற்றி”.  மனதிலேற்றி மகிழ்வது. ஆஹா! அதை நடித்துப் பார்க்க வைத்தது.

குண்டும் குழிகளிலும் இறங்கி ஆடி ஆடி மெதுவாகச் செல்லும் “ஆர் எம் எஸ் கிராமத்து ரதம்” (Railway Mail Service).

“யாரும் தன்னைப் பொருட்படுத்துவதேயில்லை” என்னும் மோனிகாவின் ஏக்கமே கதையின் அடிநாதமாக இருக்க அதை நிறுவ பி ஐ டி பாதிப்பு சமயம் தவிர மற்ற எந்த சம்பவமும் கதையில் இடம்பெறாதது குறையாகப் பட்டது. அத்தகைய  ஏக்கம் பள்ளிப்பருவம் முதல் ஆனதல்லவா?.

DMLT - Dip in Medical Laboratory Technology படித்துவிட்டு surgical ward இல் செவிலிப் பணியா? மருத்துவ துறை சார்ந்த மற்ற இடங்களை சரியாகக் கையாண்டிருக்கிறீர்கள். (காப்பீடு திட்டத்தில் உதவி பெறுகிறவர்களின் மனநிலையை போகிறபோக்கில் சொன்னது ரசித்தது.)

மோனிகா கருப்பையைப் பரிசாக அனுப்புவது என்னால் ஊகிக்கமுடியாத திருப்பம்.

முதல் வரி வாசிப்பை சற்று முடக்கிவிட்டது. “பாலத்தை கடக்கும் ஆறு” என்ற வழமையை மாற்றிய “ஆற்றை கடக்கும் பாலம்” ஏற்படுத்திய திகைப்பு. முதல் வரியில் ‘விரிந்து’ கிடக்கும் வெயில். இரண்டாவது வ்ரியில் காலைச் சூரியன். “மோனிகா பயணப்பையுடன் கமலாபுரத்தில் இறங்கியபோது” என இரண்டாவது வரியில் இருந்து தொடங்கியிருக்கலாம்.

இறுதியில் வரும் “ஒரு மாதம் கழித்து” என்று தொடங்கும் நீண்ட வரி.

ஒரு மாதம் கழித்து

வேறு நோய்த் தொற்றுகள் ஏதுமில்லை என்ற தகவலுடன்

உடலைத் தேற்றிக்கொண்டு

தன்னுடைய பயணப்பையில்

வெறுப்புடன் சிரித்தபடியே அந்த பெண் மருத்துவர் தன்னிடம் அளித்த தனது கருப்பையை

ஒரு வெல்வெட் உறையை வாங்கிப் போட்டு மூடி

கொண்டுவந்தாள்.

இது எனக்கு a, c, b, e, f, d, g என்ற வரிசையில்தான் பொருள் தந்தது. இரு வரிகளாக்கி இருக்கமுடியுமோ?

மாதா வழிபாட்டிடம் - மாதாக் கோயில் என்று எங்களூரில் சொல்லுவோம். வழிபாட்டிடம் வழிபடுபவர்களை கொண்டு பெயர் பெறுகிறது என்று தோன்றியது. இந்து வழிபாட்டிடம், கிறித்துவ வழிபாட்டிடம் போல. மாதா வழிபாட்டிடம் என்றால் மாதாக்கள் வழிபடும் இடம் என்று தோன்றியது.

மீன் வாசனை பிடிக்காத சிவக்குமாரிடம் இறந்த கருப்பை? உவ்வே!போய்

மீன் வாசனை பிடிக்காத, பெண்களை பெயர்சொல்லிக் கூப்பிடாத, எதைக் கேட்டாலும் வேறொரு கோணத்தில் பார்ப்பதை தவிர்க்கும், கெட்ட வார்த்தைகளை ரசிக்காத, பார்சலை பிரித்து பார்க்காத ‘சைவ’ சிவக்குமார் - மோனிகாவிற்கு ஏளனம்!

ஏன்?கள் சில.

ஒரு மழையிரவில் இருவரும் ஒன்றாக ஆட்டோவில் வரக் காரணம் என்ன? இருவருக்கும் பள்ளி நாட்களில் காதல்தொடங்கியது. சென்னைக்கு ஓடிப்போய் மீண்ட பிறகு ஏன் அவளைத் தவிர்க்கிறான்?

கண்ணீர், அழுகை, புணர்வு சரி, பிறகு ஏன் பிரபாகரன் முகம் நினைவில் வந்தபோது உறுத்தியது?

ஏன் அவன் காதலை இழந்தான்?

ஏன் மோனிகாவின் காதல் திருமணம் நோக்கிச் செல்லவில்லை?

பிரபாகரனை விடத் தெளிவாக வரும் சிவக்குமார் கதையில் வெறும் கூரியர் மட்டும் தானா?

ஏன் அந்தப் பரிசு?

வாசக இடைவெளி! என்னுடைய அனுபவத்திற்குள் வராதவரை அதை நிரப்புவது துப்பு துலக்குவது போல.

ஒரு நல்ல சிறுகதை படித்த நிறைவு கிடைத்தது. நன்றி.

வளர்க.

அன்புடன்,

பா. ராஜேந்திரன்.

1 comment: